பெங்களூரில் கடும் மழை! 7 பேர் பலி
பெங்களூரில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலி
பெங்களூரில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.
பெங்களூரில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஓரிரு மணிநேரம் மட்டுமே நீடித்த பலத்த காற்று மற்றும் கனமழையால் பெங்களூரின் சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.
இந்த நிலையில், கனமழையின்போது சிவாஜிநகரில் பௌரிங் மருத்துவமனையின் 8 அடி உயர சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், சுவரை ஒட்டிய நடைபாதையில் இருந்த வியாபாரிகள் உள்பட மக்கள் மீது சுவர் விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்தத நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்த மாநில முதல்வர் சித்தராமையா, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பெங்களூரில் ஓரிரு மணிநேரம் மட்டும் நீடித்த கனமழையால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, ஆலங்கட்டி மழையின் காரணமாக சில பகுதிகளில் பனியும் பொழிந்தது. மேலும், மழை, காற்று காரணமாக சில பகுதிகளில் குறைந்தது 50 மரங்கள் சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு உள்பட மெட்ரோ சேவையும் பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைக் குழுக்களும், போக்குவரத்து காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெங்களூரில் அடுத்த 12 முதல் 36 மணிநேரத்துக்கான வானிலை முன்னறிவிப்புகள் நிலையற்றதாகவே உள்ளன. மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.