பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கு எபோலா வைரஸ் பாதிப்பு?
பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த பெண்ணுக்கு எபோலா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
பெங்களூரில் உகாண்டாவைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கு எபோலா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
உகாண்டா நாட்டின் கம்பாலா பகுதியைச் சேர்ந்த நஜீர் லதீஃபா என்கிற அந்தப் பெண் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
அவருக்கு, எபோலா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
Advertisement
Advertisement
அப்பெண்ணின் ரத்த மாதிரிகள் மே 25 அன்று சேகரிக்கப்பட்டு தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் பெங்களூரு பிரிவு மூலம் புனேவில் உள்ள ஒரு சிறப்பு ஆய்வகத்திற்கு விரிவான பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் அவரை தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், அவர் பெங்களூரு வந்த பிறகு தொடர்பில் இருந்த நபர்களைப் பற்றியும் விசாரித்து வருகின்றனர்.
மத்திய அரசின் சுகாதார நெறிமுறைகளின்படி, ஆப்ரிக்க நாடுகளான உகாண்டா மற்றும் காங்கோவிலிருந்து இந்தியா வரும் பயணிகள் எபோலா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 21 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
மத்திய ஆப்ரிக்காவில் எபோலா வைரஸ் தொற்று காரணமாக இந்தாண்டில் மட்டும் 241 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.