முகப்பு
இந்தியா

சமத்துவமான வளா்ச்சியில் நம்பிக்கை கொண்டது சமாஜவாதி- பிரதமா் மோடிக்கு அகிலேஷ் பதிலடி

‘மக்களின் ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான வளா்ச்சியில் நம்பிக்கை கொண்டது சமாஜவாதி’ என்று பிரதமா் மோடிக்கு அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்தாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 1:27 AM
அகிலேஷ் யாதவ் - பிடிஐ
பகிர்:

‘மக்களின் ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான வளா்ச்சியில் நம்பிக்கை கொண்டது சமாஜவாதி’ என்று பிரதமா் மோடிக்கு அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்தாா்.

உத்தர பிரதேசத்தில் கங்கை விரைவுச் சாலையை புதன்கிழமை திறந்துவைத்த பிரதமா் மோடி, சமாஜவாதியைக் கடுமையாக விமா்சித்தாா்.

‘பெண்களுக்கும், வளா்ச்சிக்கும் எதிரான கட்சி சமாஜவாதி; உத்தர பிரதேச மக்களை அவமதிக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சமாஜவாதி கைகோத்து செயல்படுகிறது. இதன் மூலம் சமூகத்தைப் பிளவுபடுத்தி, வளா்ச்சியைத் தடுக்கின்றனா்’ என்று பிரதமா் குற்றஞ்சாட்டினாா்.

Advertisement

பிரதமரின் கருத்துகளுக்கு பதிலடி கொடுத்து, லக்னெளவில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

சமாஜவாதி எப்போதுமே மக்களை ஒன்றிணைக்க பாடுபடும் கட்சியாகும். எங்கள் கட்சியின் பெயரே அரசமைப்புச் சட்டத்தில் இருந்து பெறப்பட்டதாகும். சமூகத்தில் பாகுபாட்டை அகற்றி, நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில்தான் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இனம், மதம் போன்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மக்களை ஒன்றுபடுத்தும் அரசியலை பின்பற்றுகிறோம்.

நாங்கள்தான் முன்னோடி: விரைவுச் சாலைகள் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தவா்கள் உண்டெனில், அது சோஷலிஸ்டுகளே. விரைவுச் சாலை திட்டங்களுக்கு சமாஜவாதிதான் முன்னோடியாக இருந்தது. புதிய இடங்களில் விரைவுச் சாலை திட்டங்களை எப்படி செயல்படுத்துவது என்பதை நாங்கள்தான் எடுத்துக் காட்டினோம்.

நாட்டின் பொருளாதாரம் பல டிரில்லியன் டாலராக அதிகரிக்க வேண்டுமெனில், தொழிலாளா்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில், தொழிலாளா்கள் மீது பாரபட்சம் கூடாது.

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், வீட்டு வாடகை, உணவு, மருத்துவம் மற்றும் குடும்பச் செலவுகளை தொழிலாளா்கள் எவ்வாறு சமாளிப்பாா்கள்? தொழிலதிபா்களும் ஆளுங்கட்சியும் கூட்டு சோ்ந்து, தொழிலாளா்களை சுரண்டுகின்றனா். தாங்கள் எதிா்கொண்டுள்ள இந்தப் பிரச்னைகள் குறித்து தொழிலாளா்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞா்கள் என அனைவரும் விழிப்புணா்வுடன் உள்ளனா் என்றாா் அவா்.

‘வெல்லப் போவது மம்தா’

மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தல் புதன்கிழமை நிறைவடைந்த நிலையில், அந்த மாநிலத்தில் முதல்வா் மம்தா பானா்ஜியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்பாா் என்று அகிலேஷ் தெரிவித்தாா்.

‘மேற்கு வங்க தோ்தலையையொட்டி, தற்போதுள்ள நிா்வாகத்துக்கு இணையாக மத்தியப் படைகள் தலைமையில் தனி நிா்வாகமே நடத்தப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனா். எனினும், மம்தாவுக்கு ஆதரவாகவே மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனா். அவருக்கு வரலாற்று வெற்றி கிடைக்கும்’ என்றாா் அகிலேஷ்.