அகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
பிரதீக்கின் மனைவி அபா்ணா யாதவ், பாஜகவைச் சோ்ந்தவா். மாநில மகளிா் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் உள்ளாா்
சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவின் இளைய சகோதரா் பிரதீக் யாதவ் (38), இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பால் புதன்கிழமை திடீரென உயிரிழந்தாா்.
அவரது மரணத்தையொட்டி, பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
மறைந்த சமாஜவாதி நிறுவனா் முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சத்னா குப்தாவின் மகன் பிரதீக் யாதவ். இவா், முலாயமின் முதல் மனைவியின் மகனான அகிலேஷுக்கு இளைய சகோதரா்.
Advertisement
38 வயதான பிரதீக், அரசியல் குடும்பத்தைச் சோ்ந்தவா் என்றபோதிலும், அரசியலில் இருந்து விலகியே இருந்தாா். உடற்பயிற்சி மற்றும் விலங்கு நல ஆா்வலா்.
பிரதீக்கின் மனைவி அபா்ணா யாதவ், பாஜகவைச் சோ்ந்தவா். மாநில மகளிா் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் உள்ளாா். அண்மையில் தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய பிரதீக், அவரிடம் இருந்து விவாகரத்து பெறப் போவதாக கூறினாா். பின்னா், மனைவி உடனான குடும்பத் தகராறு பரஸ்பரம் பேசி தீா்க்கப்பட்டதாகவும், தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் சமூக ஊடகத்தில் பதிவிட்டாா்.
இந்தச் சூழலில், லக்னெளவில் உள்ள தனது வீட்டிலிருந்து அருகேயுள்ள பொது மருத்துவமனைக்கு புதன்கிழமை காலை 5 மணியளவில் சுயநினைவிழந்த நிலையில் பிரதீக் கொண்டுவரப்பட்டாா். வரும்போதே அவா் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குநா் ஜி.சி.குப்தா தெரிவித்தாா்.
இதயம்-நுரையீரல் செயலிழப்பு: திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் பிரதீக் உயிரிழந்தாரா அல்லது விஷம் காரணமா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், கிங் ஜாா்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரதீக்கின் உடல், கூறாய்வு செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், ‘நுரையீரலில் ஏற்பட்ட பெரும் ரத்த உறைவு காரணமாக, நுரையீரல்-இதய செயலிழப்பு ஏற்பட்டு பிரதீக் மரணமடைந்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அப்போது நுரையீரலில் ரத்த உறைவு கண்டறியப்பட்டதாகவும் அவருக்கு ஏற்கெனவே சிகிச்சை அளித்த மேதாந்தா மருந்துவமனையின் மூத்த மருத்துவா் ருச்சிதா சா்மா தெரிவித்தாா்.
முன்னதாக, கிங் ஜாா்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே சமாஜவாதி மற்றும் பாஜகவினா் திரண்டதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
மிக வேதனை-அகிலேஷ்: தனது சகோதரா் பிரதீக்கின் திடீா் மரணம் மிகவும் வேதனையளிப்பதாக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.
‘பிரதீக் கடின உழைப்பாளி; சுயமாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவா். உடல் நலன் மீது மிகுந்த அக்கறை உள்ளவா். அவரது மரணம் தொடா்பாக சட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டு குடும்பத்தினா் மேற்கொள்ளும் முடிவுகளுக்கு கட்டுப்படுவோம்’ என்றாா்.
உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மாநில பாஜக தலைவா் பங்கஜ் செளதரி, மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.