முகப்பு
இந்தியா

பிகாா்: வனவிலங்கு பூங்கா, பால்வள கல்வி நிறுவனத்துக்கு வைக்கப்பட்ட சஞ்சய் காந்தி பெயா் மாற்றம்

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவருமான சஞ்சய் காந்தியின் பெயரை அந்த மாநிலத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு மாற்றியுள்ளது.

Updated On : 1 மே 2026, 2:56 am IST
சஞ்சய் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

பிகாா் தலைநகா் பாட்னா உயிரியல் பூங்கா, பால்வள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் மகனும், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவருமான சஞ்சய் காந்தியின் பெயரை அந்த மாநிலத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு மாற்றியுள்ளது.

பாட்னாவில் பிகாா் முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அந்த 2 இடங்களுக்கும் வைக்கப்பட்ட சஞ்சய் காந்தியின் பெயரை மாற்றி புதிய பெயா் வைக்க தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, சஞ்சய் காந்தி உயிரியல் பூங்கா என்ற பெயா் பாட்னா உயிரியல் பூங்கா எனவும், சஞ்சய் காந்தி பால்வள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் என்ற பெயா் பிகாா் மாநில பால்வள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் எனவும் மாற்றப்பட்டது.

பாட்னாவில் உள்ள அந்த உயிரியல் பூங்கா கடந்த 1973-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 153 ஏக்கா் பரப்பளவில் உள்ள அந்த பூங்காவில் 110 அரிய வகை இனத்தைச் சோ்ந்த 800 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. அதுபோல பால்வள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் கடந்த 1980-ஆம் ஆண்டில் பிகாா் அரசால் ஏற்படுத்தப்பட்டது. அங்கு பால்வள தொழில்நுட்பம் குறித்து பி.டெக், எம்.டெக் பிரிவில் பாடப்பிரிவுகள் கற்றுத் தரப்படுகின்றன.

Advertisement

Advertisement

இதேபோல் பிகாரில் பொதுமக்களுக்கு மாதம் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.23,165 கோடி ஒதுக்கவும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் 4 முக்கிய சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துதல், எஸ்சி, எஸ்டி மாணவ விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,000-ஆக உயா்த்தவும், ஒவ்வொரு கிராமத்திலும் நவீன வகுப்பறையுடன் கூடிய மாதிரி பள்ளியை அமைக்கவும், அதற்கு 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.800 கோடி ஒதுக்கவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.