இந்தியாவில் முதன்முறையாக சாலையில் 80 கி.மீ. வேகத்தில் சென்றால் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல் ஒலிக்கும் மெல்லிசை சாலை திறக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தர்மவீர் பகுதியில் உள்ள கடற்கரை சாலையில் அமர்சன்ஸ் கார்டன் முதல் பிரீச் கேண்டி வரையிலான பகுதியில், மெல்லிசை சாலையை(Melody Road), அந்த மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அண்மையில் திறந்து வைத்தார்.
சத்ரபதி சம்பாஜி மகாராஜ் கடற்கரை சாலையை, வாகனங்கள் கடந்து செல்லும்போது, பாடல் ஒலிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்ட இசைத்தகடுகள்போல ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தப் பாதையை வாகன ஓட்டிகள் 80 கி.மீ. வேகத்தில் கடக்கும்போது ஆஸ்கர் விருது வென்ற "ஜெய் ஹோ" பாடல் ஒலிக்கும். இந்த தொழில்நுட்பம் ஹங்கேரிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முயற்சி இந்தியாவின் முதல்முறையாக மும்பையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலானது வாகன ஓட்டிகளுக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலையின் மேற்பரப்பில் ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ் வைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் இந்த பட்டைகளைக் கடந்து செல்லும்போது, வாகன டயர்களுக்கும், சாலை மேற்பரப்பிற்கும் இடையிலான உராய்வு காரணமாக 'ஜெய் ஹோ' என்ற பாடல் ஒலிக்கும்.
வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வைப்பதன் நோக்கமாக இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.