ஆந்திரத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் பலி
ஆந்திரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.
ஆந்திரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்தில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. எனினும் இந்த விபத்தில் 7 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பலர் காயமடைந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அருகிலுள்ள வயல்களில் தூக்கி எறியப்பட்டனர்.
விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை சூழந்து காணப்பட்டது. இதனிடையே பட்டாசு ஆலை விபத்து குறித்து அதிகாரிகளிடம் பேசியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மீட்பு பணிகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவோம் என்று அவர் மேலும் கூறினார். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று மாநில உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா தெரிவித்துள்ளார். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.