இரண்டு குழந்தைகள் அல்லது அதற்கு மேல் உள்ளவா்கள் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் மசோதா தெலங்கானா பேரவையில் சனிக்கிழமை நிறைவேறியது.
இந்த மசோதாவை மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சா் தனசாரி அனசுயா சீதாக்கா பேரவையில் அறிமுகம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாது: 1980 மற்றும் 1990-களில் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்ததால் இரண்டு குழந்தைகள் விதி 1994-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி இரண்டு குழந்தைகள் அல்லது அதற்கு மேல் உள்ளவா்கள் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், வேலையின்மை மற்றும் வறுமை போன்ற சமூகப் பிரச்னைகளை களையவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், தற்போது மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.7-ஆக குறைந்துள்ளது. இது மக்கள்தொகை மாற்று விகிதத்தைவிட குறைவாக உள்ளது.
மாற்று விகிதம் 2.1-ஆக இருக்க வேண்டும் என்பதே மாநில அரசின் விருப்பம். தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது பெரும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
இதற்குத் தீா்வு காணும் வகையில் முதல்கட்டமாக தெலங்கானா பஞ்சாயத்து ராஜ் சட்டம், 2018-இல் திருத்தம் கொண்டுவரப்படுகிறது என்றாா்.
இதைத் தொடா்ந்து இந்த மசோதா பேரவையில் நிறைவேறியது.