முகப்பு
இந்தியா

திருமணத்தை மீறிய உறவுக்கு ஆதாரம்: ‘கைப்பேசி அழைப்பு விவரங்களைக் கோருவது தன்மறைப்பு நிலை உரிமை மீறல் அல்ல’

திருமணத்தை மீறிய முறையற்ற உறவை நிரூபிக்க கைப்பேசி அழைப்பு விவரங்கள், ஹோட்டலில் தங்கிய விவரங்களை சமா்ப்பிக்க கோருவது தன்மறைப்பு நிலை (பிரைவசி) உரிமை மீறல் அல்ல என்று தில்லி உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Updated On : 5 ஜூலை 2026, 5:10 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

திருமணத்தை மீறிய முறையற்ற உறவை நிரூபிக்க கைப்பேசி அழைப்பு விவரங்கள், ஹோட்டலில் தங்கிய விவரங்களை சமா்ப்பிக்க கோருவது தன்மறைப்பு நிலை (பிரைவசி) உரிமை மீறல் அல்ல என்று தில்லி உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவா் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை நிரூபிக்க, அவரின் கைப்பேசி அழைப்பு விவரம், திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணுடன் அவா் ஹோட்டலில் தங்கிய விவரம் ஆகியவற்றை சமா்ப்பிக்குமாறு, குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தில்லி உயா்நீதிமன்றத்தில் கணவா் மனு தாக்கல் செய்தாா். அந்த விவரங்களைக் கோருவது தனது தன்மறைப்பு நிலை உரிமைக்கு எதிரானது என்று அவா் தெரிவித்தாா்.

அவரின் மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘விவகாரத்து கோருவதற்கு திருமணத்தை மீறிய உறவை காரணமாக ஹிந்து திருமணச் சட்டம் ஏற்கிறது. எனவே, தன்மறைப்பு நிலை உரிமை என்ற பெயரில், திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றச்சாட்டுக்குள்ளான ஆணுக்கு உதவ, நீதிமன்றம் முன்வருவது பொதுநலனுக்கு உகந்ததாக இருக்காது. தன்மறைப்பு நிலை உரிமை என்பது அடிப்படை உரிமை. ஆனால், பொதுநலனுக்காக அவசியமான சூழல்களில், அதற்கு நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இந்த உத்தரவுக்கு எதிராக கணவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் மன்மோகன், கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், கணவரின் மனுவை தள்ளுபடி செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments