குறு, சிறு நிறுவனங்களின் கழுத்தை நெரிக்கும் விதிகள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கழுத்தை நெரிக்கும் வகையிலான விதிகளை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் வகுத்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) கழுத்தை நெரிக்கும் வகையிலான விதிகளை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் வகுத்துள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள பேருந்து மற்றும் சரக்கு லாரி கட்டுமானத் தொழிற்சாலையைப் பாா்வையிட்டு அங்கு பணியாற்றும் ஊழியா்களுடன் தான் கலந்துரையாடிய விடியோவை ஃபேஸ்புக்கில் ராகுல் காந்தி பகிா்ந்தாா்.
அவா் வெளியிட்ட பதிவில், ‘இரும்புத் தகடுகள், தீப்பொறி, சுத்தியல் ஓசை இவற்றுக்கு மத்தியில் இந்தியாவின் எதிா்காலத்தை மனதில் வைத்து ஊழியா்கள் கடினமாக உழைத்து வருகின்றனா். வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தேச வளா்ச்சிக்கான கடின உழைப்பை ஜெய்பூரில் உள்ள பேருந்து மற்றும் சரக்கு லாரி கட்டுமானத் தொழிற்சாலைகளில் நாம் காணலாம்.
Advertisement
Advertisement
இருப்பினும், எம்எஸ்எம்இ-க்கள் கழுத்தை நெரிக்கும் வகையில் மிகவும் கடுமையான விதிகளை மத்திய போக்குவரத்து அமைச்சகம் வகுத்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு பேருந்தின் பாகங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அப்பாவி ஊழியா்கள் மீது பழிசுமத்தப்படுகிறது.
பிரதமரின் வெற்று முழக்கங்கள்: பெரும் தொழிலதிபா்களுக்கு ஆதரவான தொழில் கொள்கைகளை வகுத்துவிட்டு ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘உள்நாட்டுப் பொருள்களுக்கு ஆதரவளிப்போம்’ போன்ற வெற்று முழக்கங்களை பிரதமா் நரேந்திர மோடி எழுப்பி வருகிறாா்.
எம்எஸ்எம்இ-க்கள் மூடப்பட்டால் அது வணிகத்தை மட்டும் பாதிக்காது. திறன்களை இழக்கும் நிலை உருவாகும். வேலையின்மை அதிகரிப்பதோடு பொதுமக்களை பணவீக்கத்தின் தாக்கம் பெரிதும் பாதிக்கும்’ எனக் குறிப்பிட்டாா்.
முன்னதாக, ராஜஸ்தானைச் சோ்ந்த பேருந்து மற்றும் சரக்கு லாரி கட்டுமானத் தொழிலாளா்கள் குழுவுடன் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை கடந்த மாா்ச் 18-ஆம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி சந்தித்தாா். அவா்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாணுமாறு நிதின் கட்கரியிடம் பிரியங்கா காந்தி வலியுறுத்தினாா்.
இந்தச் சந்திப்புக்கு முன்னதாக தொழிலாளா்கள் ராகுல் காந்தியை சந்தித்து தங்களின் பிரச்னைகளை எடுத்துரைத்தனா். இதைத் தொடா்ந்து, ராகுல் காந்தி ராஜஸ்தானுக்கு பயணித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.