மார்பளவு வெள்ளத்தில் உயிர் காக்கும் போராட்டம்... கதவை ஸ்ட்ரெச்சராக மாற்றி கர்ப்பிணி மீட்பு!
பால்கர் மாவட்டத்தில் கர்ப்பிணியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதைப் பற்றி..
மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வீட்டின் கதவைத் தற்காலிக ஸ்ட்ரெச்சராக மாற்றி, மார்பளவு வெள்ள நீரில் நடந்துசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த நான்கு நாள்களாக பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதான சாலைகளிலும், ரயில் தண்டவாளங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மாவட்டங்களில் சாலைப் போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமானச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செல்வே சாலைக்கு அருகிலுள்ள மேகோப் பகுதியில் உள்ள அனுமன்படாவைச் சேர்ந்த பிரியங்கா ரவி யாதவ் என்பவருக்கு செவ்வாய்க்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கனமழையால் வீட்டைச் சுற்றியுள்ள சாலைகள் நீரில் மூழ்கியதாலும், கிராமம் துண்டிக்கப்பட்டதாலும் ஆம்புலன்ஸை வரவழைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. யாதவின் குடும்பத்தினர் பதற்றமடைந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் உடனே ஒரு குழுவைத் திரட்டினர்.
Advertisement
Advertisement
உடனடியாகச் செயல்பட்டு, அருகில் மரத்தாலான கதவு ஒன்றை எடுத்து, அதன் மீது பிரியங்காவைப் படுக்கவைத்து, அவரை தோள்களில் சுமந்துகொண்டு வெள்ள நீரில் இறங்கினர். மார்பளவு ஆழமுள்ள நீரில், மிகுந்த கவனத்துடனும் உறுதியுடனும் அந்த கதவு ஸ்ட்ரெச்சரை சமநிலைப்படுத்தி நடந்து சென்று, பிரியங்காவைப் பாதுகாப்பாக சஃபாலே கிராமப்புற மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர்.
பின்னர், மருத்துவர்களின் மேற்பார்வையில் அப்பெண் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டதால் பிரியங்காவையும் அவரது குழந்தையையும் காப்பாற்ற முடிந்ததாக பிரியங்காவின் கணவர் தெரிவித்தார். மீட்புக் குழுவினர் வெள்ள நீரில் நடந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
In a flooded village in Maharashtra's Palghar district, locals turned a house door into a makeshift stretcher and waded through chest-deep water to carry a pregnant woman in labour to the hospital, ensuring she reached in time.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.