இந்தோனேசியாவில் பிராம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
பிராம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டது பற்றி..
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பழமையான பிராமனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தனது பயணத்தின் முதல் கட்டமாக, இந்தோனேசியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
இந்தோனேசியாவின் உயரிய விருதான 'பிந்தாங் அதிபூர்ணா' பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன் இருநாட்டு உறவுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
Advertisement
Advertisement
இந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக, யோக்யகர்த்தாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான பிராம்பனன் கோயிலுக்கு அந்நாட்டு அதிபர் சுபியான்டோவுடன் பிரதமர் மோடி சென்றார். இருவரும் ஹெலிகாப்டரில் சென்ற புகைப்படத்தைப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் உதவியுடன் இக்கோயில் வளாகத்தைப் பாதுகாத்துச் சீரமைக்கும் திட்டத்தைத் தொடங்குவதற்கான விருப்பக் கடிதத்தை நேற்று பரிமாறிக்கொண்டன. மேலும் கோயிலின் அழகிய கோபுர அமைப்புகளை ஹெலிகாப்டரில் இருந்தபடி பிரதமர் கண்டு ரசித்தார்.
பிரதமர் மோடியும் அதிபர் சுபியான்டோவும் பாரம்பரியச் சின்னத்தைப் பார்வையிட்டதுடன், யோக்யகர்த்தாவில் பிராம்பனன் கோயில் சீரமைப்புத் திட்டத்தையும் தொடங்கி வைத்தனர்.
யோக்யகர்த்தா நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாகக் கருதப்படுகிறது. 10-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, இந்தோனேசியாவில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய கோயில் வளாகமாகும்.
யுனெஸ்கோ இணையதளத் தகவலின்படி, இக்கோயில் வளாகத்தின் மையப்பகுதியில் மூன்று முக்கிய இந்து தெய்வங்களுக்கு (சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா) ஆகிய மும்மூர்த்திகளுக்காகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இக்கோயில்கள் ராமாயணக் காவிய காட்சிகளைச் சித்தரிக்கும் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.