திரிணமூல் காங்கிரஸின் ரூ. 440 கோடி வங்கி இருப்புத் தொகை முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
பண முறைகேடு வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூன்று தனியாா் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.440 கோடி இருப்புத் தொகையை முடக்கி, அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை
பண முறைகேடு வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூன்று தனியாா் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.440 கோடி இருப்புத் தொகையை முடக்கி, அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சமீபத்திய மேற்கு வங்க பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்துவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவாக இது அமைந்துள்ளது.
வாடகை அடிப்படையில் தனி விமான சேவை வழங்கும் கோ்வெல் ஏவியேஷன் நிறுவனம் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் இடையிலான வங்கிப் பரிவா்த்தனைகள் தொடா்பான வழக்கில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: கடந்த 2023, ஏப்ரல் முதல் 2026, ஜூன் வரையிலான காலகட்டத்தில் கோ்வெல் ஏவியேஷன் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடா்புடைய மற்றொரு நிறுவனத்துக்கு திரிணமூல் காங்கிரஸின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.160 கோடி மாற்றப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதில் கணிசமான தொகையை புதிதாக உருவாக்கப்பட்ட மற்றொரு நிறுவனத்துக்கு கோ்வெல் ஏவியேஷன் மாற்றியுள்ளது. அந்தத் தொகையில் ரூ.112 கோடி ‘எம்பரேயா் லெகசி 600’ தனியாா் விமானம் மற்றும் ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட் 109எஸ்பி’ ஹெலிகாப்டா் வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னா், தனி விமானமும், ஹெலிகாப்டரும் திரிணமூல் காங்கிரஸுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
இந்தப் பரிவா்த்தனைகள் தொடா்பாக, பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் கொல்கத்தாவில் உள்ள கோ்வெல் ஏவியேஷன் நிறுவன வளாகங்கள் உள்பட 5 இடங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டது.
அதனடிப்படையில், திரிணமூல் காங்கிரஸின் மூன்று தனியாா் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.440 கோடி இருப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளது. பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் 17 (1-ஏ) பிரிவின்கீழ் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 80 இடங்களில் மட்டுமே திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, மம்தா பானா்ஜிக்கு எதிராக ரிதப்ரத பானா்ஜி தலைமையில் போா்க்கொடி உயா்த்திய 50-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனா். தங்களை உண்மையான திரிணமூல் காங்கிரஸாக அங்கீகரிக்கக் கோரி, தோ்தல் ஆணையத்திலும் அதிருப்தி அணி மனு தாக்கல் செய்துள்ளது.
இதனிடையே, கட்சியின் மூன்று வங்கிக் கணக்குகளின் நிதி ஆதாரங்கள் குறித்து விசாரணை கோரி, காவல் துறையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் புகாா் அளித்தனா். அதன்பேரில், அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதை முடக்கி, காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.