தனியார் பள்ளிகளில் 5% கட்டணம் வரை உயர்த்தலாம்: பஞ்சாப் அரசு!
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் பற்றி..
பஞ்சாபில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 5 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ளலாம் எனப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.
இதுதொர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை ஆண்டுக்கு 5 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்படாது, அடுத்த சட்டப்பேரவையில் இதுதொடர்பான சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
Advertisement
Advertisement
பள்ளிகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டண பாக்கிகள் முழுமையாகச் செலுத்தப்படும் வரை, மாணவர்களின் பதிவு எண்கள் அல்லது சான்றிதழ்களை வழங்காமல் நிறுத்திவைப்பதாக மிரட்டி பள்ளிகள் தங்களைத் துன்புறுத்துவதாகப் பெற்றோரிடமிருந்தும் மாணவர்களிடமிருந்தும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தனியார் பள்ளிகள் உயர்த்தும் கல்விக் கட்டணம் ஆண்டுக்கு 5 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்படும் என்று பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடு கல்விக் கட்டணத்திற்கு மட்டுமல்லாமல், அனைத்து வகையான கட்டணங்களுக்கும் பொருந்தும் என்று முதல்வர் தெளிவுபடுத்தினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமாகக் கட்டணத்தை உயர்த்திய பள்ளிகள், 15 சதவீத வரம்பிற்கு மேல் கூடுதலாக வசூலித்த கட்டணத் தொகையைத் திரும்பச் செலுத்தவேண்டும்.
இது தொடர்பாகக் கடுமையான சட்டம் கொண்டுவரப்படும், அதுவே நாட்டிலேயே மிகவும் கடுமையான சட்டமாக இருக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் உறுதியளித்தார்.
இச்சட்டத்தின் விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.