டெலிகிராம் மூலம் நீட் போலி வினாத்தாள் விற்பனை! ராஜஸ்தானில் ஒருவர் கைது!
டெலிகிராம் செயலி மூலம் நீட் போலி வினாத்தாள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பற்றி...
விபிஎன் மூலம் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி, நீட் போலி வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டதில் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கைது செய்துள்ளனர்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். இதையடுத்து, தேர்வுக்கு முன்னதாகவே தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் கசிந்ததாகப் புகார்கள் வந்தன.
இந்தப் புகார்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நீட் போலி வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டதில் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞரைக் கைது செய்த டிஎஸ்பி நேமி சந்த் சௌதரி பேசியதாவது:
ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக, ராஜஸ்தான் மாநிலம், படேல் நகரைச் சேர்ந்த ஆகாஷ் சௌதரி என்ற இளைஞர் போலி வினாத்தாளைத் தயாரித்து, சிலர் அதை விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவரை காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 22 ஆம் தேதி வரை காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் விசாரிப்போம். குற்றவாளியான ஆகாஷ் சௌதரியின் டெலிகிராம் குழுவில் 54 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். விபிஎன் செயலி மூலம் அவர் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி இத்தகைய குற்றச்சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் என்று நேமி சந்த் சௌதரி தெரிவித்தார்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் நோக்கில் ஜூன் 22-ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Police arrested a young man from Rajasthan on Friday (June 19) for selling a fake NEET question paper using the Telegram app via a VPN.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.