நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...
நீட் மறுதேர்வு நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவதை தடுக்க டெலிகிராம் செயலிக்குத் தற்காலிக தடை விதித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டது.
நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இதில் குளறுபடி ஏற்படுவதை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கு முன்னதாக டெலிகிராம் மூலம் வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த செயலிக்கு தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“நீட் தேர்வுக்குப் பிறகு வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரங்கள் டெலிகிராம் செயலியில் மாற்றப்பட்டது. அதன் தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-வின் கீழ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் நீட் மறுதேர்வு முடிவடையும் ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்படுகிறது, அதன்பின்னர், ஏற்கெனவே அனுப்பப்பட்ட செய்திகளைத் திருத்தும் வசதியை (message-editing feature) 30 ஜூன் 2026 வரை முடக்குமாறு அந்த தளத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.