நீட் வினாத்தாள் கசிவு: அரசு கவனம் செலுத்தாதது ஏன்? - காங்கிரஸ்
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்து.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தாதது ஏன்? என்ற கேள்வியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை எழுப்பியுள்ளார்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் வந்தன.
அதாவது, நீட் தேர்வில் கேட்கப்பட்ட 720 மதிப்பெண்களில், ஏறக்குறைய 600 மதிப்பெண்களுக்குரிய கேள்விகள், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தான் மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா-விடை வங்கியில் இடம்பெற்றிருந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகின்றது.
Advertisement
இந்த நிலையில், மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை இன்று (மே 12) அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “"இதுமாதிரியான சம்பவம் மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. அரசு ஏன் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை? என்பது எனக்கு புரியவில்லை. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் போன்ற மாநிலங்களில் இது நடைபெறுகிறது.
வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது ஓராண்டு கால நிகழ்வு அல்ல; இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தேர்வுகளை நடத்துபவர்கள் மற்றும் வினாத்தாள்களை அமைப்பவர்கள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.