நீட் மாணவி தற்கொலை! பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் அடுக்கடுக்கான கேள்விகள்!
நீட் மாணவி தற்கொலை விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் காங்கிரஸ் கேள்வி
நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வெழுதிய மாணவி ஒருவர் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டார். மேலும், தற்கொலைக் கடிதத்தில் அவர் கூறியதாவது, என்னை மன்னித்து விடுங்கள்.. மீண்டும் ஒருமுறை நீட் தேர்வெழுத எனக்கு தைரியமில்லை என்று தெரிவித்திருந்தார்.
மாணவியின் தற்கொலை குறித்து பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பிய காங்கிரஸ், தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "நீட் வினாத்தாள் கசிந்ததால், 18 வயதேயான ஆகாங்ஷா சதுர்வேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு மருத்துவராகச் சேவையாற்ற விரும்பிய நிலையில், அவரது கனவை வினாத்தாள் கசிவு கலைத்து விட்டது.
Advertisement
Advertisement
வினாத்தாள் கசிவால், மாணவியின் குடும்பம் வாழ்நாள் துன்பத்தை அடைந்துள்ளது. ஆகாங்ஷாவை மருத்துவராக்குவதற்காக, விவசாயியான அவரது தந்தை ரூ. 3 லட்சம் கடன் பெற்றதுடன், சமையல்காரராகவும் பணிபுரிந்து வந்தார். இருந்தபோதிலும், அவர்களிடமிருந்து அவர்களின் மகளை வினாத்தாள் கசிவு பறித்துக் கொண்டது.
நீட் வினாத்தாள் கசிவால் 6 குழந்தைகள் பலியானபோதிலும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவே இல்லை.
இது தற்கொலை அல்ல; ஊழல் நிறைந்த அரசால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொலை. பிரதமர் மோடியும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும்தான் இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பு.
வினாத்தாள் கசிவு குறித்து அரசுக்கு நாடு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
நீட் வினாத்தாள் கசிவால் இன்னும் எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படவிருக்கின்றனர்?
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பிரதமர் மோடி ஏன் பாதுகாக்கிறார்?
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எப்போதுதான் தண்டிக்கப்படுவர்?
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எப்போது பதவிலியிருந்து விலக்கப்படுவார்?" என்று கூறியுள்ளனர்.