நீட் மறுதேர்வு: விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் வினாத்தாள்கள்!
நீட் மறுதேர்வுக்காகத் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் விமானங்களில் எடுத்துச் செல்லப்படுவது பற்றி...
நீட் மறுதேர்வுக்காகத் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் என்று தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்றனர். அந்தத் தேர்வில் கொடுக்கப்பட்ட வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே ராஜஸ்தான் பகுதிகளில் கசிந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது.
மேலும், மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்த நிலையில், சிபிஐ இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறது. பேராசிரியர், ஆசிரியர் மற்றும் பயிற்சி மைய உரிமையாளர் என பத்துக்கும் மேற்பட்டோரை இதுவரை, சிபிஐ கைது செய்துள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள நீட் மறுதேர்வில் எந்தவித குளறுபடியும் ஏற்படாமல் இருக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருகிறது.
இது குறித்து தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் அபிஷேக் சிங் பேசுகையில், முதல்முறையாக நீட் மறுதேர்வைப் பாதுகாப்பாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில், வினாத்தாள்கள் விமானங்களில் எடுத்து செல்லப்பட உள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 18 விமானத் தளங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு, அதன் பின்னர் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஜூன் 21 ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்களைக் கொண்டு செல்லும் பணிக்கு இந்திய விமானப்படை ஈடுபடுத்தப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.