கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் அழைப்பு!
கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் அழைப்பு விடுத்துள்ளதைப் பற்றி...
ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
அவரின் இறுதிச்சடங்கு மற்றும் உடல் அடக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ தேதியை ஈரான் அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி, கமேனியின் இறுதிச்சடங்கு ஜூலை 4-ஆம் தேதி தலைநகர் தெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9-ஆம் தேதி அவரது சொந்த ஊரான வடகிழக்கு புனித நகரமான மஷாத்தில் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் தெஹ்ரானில் பிரியாவிடை நிகழ்ச்சிகளும், ஜூலை 6 அன்று இறுதி ஊர்வலமும் நடைபெறும். அதைத்தொடர்ந்து, ஜூலை 7-ல் புனித நகரான கோமில் சிறப்பு தொழுகையும், ஜூலை 9-ல் மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசாவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பலியானதைத் தொடர்ந்து, புதுதில்லியில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும், ரைசியின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கலந்துகொண்டது நினைவுகூரத்தக்கது.
கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கபோவது யார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.