ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தது குறித்து...
ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், திருப்பூர் நேதாஜி அப்பரல் பூங்காவில் செயல்பட்டு வரும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், ஏற்றுமதி வளர்ச்சி, உற்பத்தித் திறன், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஜவுளித்துறையின் தற்போதைய நிலை குறித்து தொழில்துறையினர் அமைச்சரிடம் விளக்கமளித்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கிரிராஜ் சிங், இந்தியாவின் ஜவுளித்துறையின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை 2030-31-ஆம் நிதியாண்டுக்குள் 350 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த இலக்கை எட்டுவதில் திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஜவுளி மையங்கள் முக்கியப் பங்காற்றும் என்றும், இந்தியாவின் ஜவுளித் தொழிலில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாகவும், குறிப்பாக ஆடை உற்பத்திக்கான இயற்கையான தொழில் தொகுப்பாக திருப்பூர் விளங்குவதாகவும் அவர் கூறினார்.
வரும் 2030-31-ஆம் நிதியாண்டுக்குள் திருப்பூரின் ஏற்றுமதி மதிப்பை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்கு எனவும், இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கைத்தறி, கைவினைப் பொருள்கள், பட்டு வளர்ப்பு, ஜவுளி மற்றும் பருத்தித் துறைகளின் வளர்ச்சிக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் பி.எம். மித்ரா (PM MITRA) ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பருத்தி இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருப்பது ஜவுளித்துறையின் வளர்ச்சிக்கு கூடுதல் ஊக்கமாக அமையும்
2030-31-ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த ஜவுளித்துறை இலக்கில் உள்நாட்டுச் சந்தை மதிப்பு 250 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி மதிப்பு 100 பில்லியன் டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) மூலம் இந்திய ஜவுளிப் பொருள்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் திருப்பூர், தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் ஜவுளித்துறையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும்.
தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட சவால்கள் இருந்தாலும், புதிய நவீன இயந்திரங்கள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அவற்றை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பி.எம். மித்ரா ஜவுளிப் பூங்காவின் அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் புதிய வசதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் நடத்தும் மனதின் குரல் நிகழ்ச்சியை தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்களுடன் மத்திய அமைச்சர் கண்டார்.
Union Textiles Minister Giriraj Singh stated that a target of 350 billion has been set for the textile sector by 2031.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.