பிரிக்ஸ் கூட்டத்தில் விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம்: வேளாண் அமைச்சர்
பிரிகஸ் கூட்டமைப்பில் விவசாயிகள் நலன் பற்றி..
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பிரிகஸ் கூட்டமைப்பின் ஐந்து நாள் கூட்டம் நடைபெறும் நிலையில், இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் நலன் குறித்து விவாதிக்கப்படும் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் இக்கூட்டங்களில், ஜூன் 9 முதல் மூன்று நாள்கள் விவசாயப் பணிக்குழு கூட்டமும், ஜூன் 12 முதல் இரண்டு நாள்கள் பிரிக்ஸ் அமைச்சர்கள் அளவிலான கூட்டமும் நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய பதினொரு நாடுகள் பங்கேற்கும்.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சிவராஜ் சிங் சௌஹான், உலகின் வளரும் நாடுகளின் மிக வலுவான குரலாக பிரிக்ஸ் திகழ்கிறது என்று கூறினார்.
உலகின் மக்கள் தொகையில் சுமார் பாதி பேர் பிரிக்ஸ் நாடுகளில் வசிக்கின்றனர். உலகளாவிய விவசாய நிலப்பரப்பில் 42 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை அளிக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள 58 கோடி விவசாயிகளில், 70 சதவீத சிறு விவசாயிகள் பிரிக்ஸ் நாடுகளிலேயே வசிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், ஊட்டச்சத்து, பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய நவீன விவசாயம், சர்வதேச விவசாய வர்த்தகத்தை எளிதாக்குதல், விநியோகச் சங்கிலிகள், டிஜிட்டல் விவசாயம், ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவை குறித்து இந்த 5 நாள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியா இதற்கு முன்பு 2012, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிரிக்ஸ் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளதை அவர் நினைவு கூர்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் உலகளாவிய விவசாயத் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாக அமையும் என கடந்த மாதம் இந்தூரில் செய்தியாளர்களிடம் சௌஹான் கூறியிருந்தார்.
மத்தியப் பிரதேச அரசு 2026-ஆம் ஆண்டை 'வேளாண் நல ஆண்டு' என அறிவித்துள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தின் நிதித் தலைநகரான இந்தூரில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.