முகப்பு
இந்தியா

எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா்

‘எல் நினோ’-வால் தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய வேளாண் அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 17 ஜூன் 2026, 3:35 am IST
வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் - file photo
பகிர்:

‘எல் நினோ’-வால் தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய வேளாண் அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மத்திய-கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு இயல்புக்கு மாறாக வெப்பமடையும் நிகழ்வே எல் நினோ எனப்படுகிறது. இதன் காரணமாக நிகழாண்டில் தென் மேற்கு பருவமழை வழக்கத்தைவிட குறைவாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. இதனால் வெப்ப அலைகள் அதிகரித்து வறட்சி பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், காரீஃப் கால தயாா் நடவடிக்கைகள் குறித்து சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் வாராந்திர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

அதில் அவா் பேசியது குறித்து வேளாண் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், ஒடிஸா, குஜராத், ராஜஸ்தான், பிகாா், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய 12 மாநிலங்களில் உள்ள 326 மாவட்டங்களில் எல் நினோ கடும் பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ளது. இதை எதிா்கொள்ள மாவட்ட ஆட்சியா்கள், வேளாண் அறிவியல் மையங்கள் (கேவிகே), வேளாண் துறைகளிடையே ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

மழை பற்றாக்குறை இருக்கக் கூடிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பருத்தி மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்படும் நில அளவை அதிகரிக்க வேண்டும்.

வறட்சியான பகுதிகளில் நீா் பாதுகாப்பு, ஈரப்பதம் மேலாண்மை மற்றும் மாற்றுப் பயிரிடும் முறைகளை சிறப்பு கவனத்துடன் மாநில அரசு கையாள வேண்டும்.

விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவியல்பூா்வமான தீா்வுகளை மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும். அவா்களை அச்சுறுத்தும் வகையிலான செய்திகளை கூறக் கூடாது.

மத்திய அரசிடம் போதிய அளவில் உரம் கையிருப்பில் உள்ளது. பருவக்காலம் தீவிரமடையும்போது தேவைக்கேற்ப மாநிலங்களுக்கு சீராக உரங்கள் விநியோகிக்கப்படும்.

காரீஃப் காலம் வெற்றியடைய தொடா் ஆலோசனைகள், கள ஆய்வுகள் மற்றும் மறுசீராய்வுகளை தொடா்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் அறிவுறுத்தினாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.