முகப்பு
இந்தியா

சார்தாம் யாத்திரை: 47 கோயில்களில் ஹிந்து அல்லாதோர் நுழைய தடை!

பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்கள் உள்பட 47 கோவில்களில் ஹிந்து அல்லாதோர் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 11 மார்ச், 2026 at 4:31 PM
பத்ரிநாத் - கேதர்நாத் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்கள் உள்பட 47 கோவில்களில் ஹிந்து அல்லாதோர் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரை அடுத்த மாதம் (ஏப். 19) தொடங்கவுள்ளது. இந்த யாத்திரையானது அங்குள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களை தரிசிக்கும் விதமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர்.

சார்தாம் யாத்திரையை பத்ரி - கேதர் கோயில் குழுமம் முன்னெடுக்கிறது. சார்தாம் யாத்திரையின் தொடக்கமாக கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய தலங்களின் கதவுகள் வருகிற ஏப். 19 திறக்கப்படவுள்ளதால் அதற்கான பதிவு செய்யும் நடைமுறை மார்ச் 6 அன்று தொடங்கியது.

Advertisement

இந்நிலையில் பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய புனித தலங்கள் உள்பட 47 கோவில்களில் ஹிந்து அல்லாதோர் நுழைய கோயில் குழுமம் சார்பில் தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முடிவு நேற்று (மார்ச் 10) நடைபெற்ற கோயில் பட்ஜெட் கூட்டத்தின்போது நிர்வாகத் தலைவர் ஹேமந்த் திவிவேதி தலைமையில் எடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பேசிய அவர், “ஹிந்துத்துவம் மற்றும் சனாதன தர்மத்தை நம்புவோரும், பாபா கேதர்நாத் மற்றும் பத்ரி விஷால் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களும் இங்கு வரவேற்கப்படுகிறார்கள். மேலும், சனாதனத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள் கோயில் வளாகத்தினுள் நுழைவது கண்டிப்பாகத் தடை செய்யப்படுகிறது. இந்தக் கோயில்கள் நிர்வாகக் குழுவின் அதிகார வரம்பிற்குட்பட்டது. எனவே, அதன் புனிதத்தை நிலைநிறுத்துவதற்கான உரிமையை நாங்கள் பயன்படுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

உத்தரகாண்ட் முழுக்க பல புனிதத் தலங்களில் ஹிந்து அல்லாதோர் நுழையத் தடை விதிக்கப்படுவது அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுளளது.

முன்னதாக, இவ்வாண்டு தொடக்கத்தில் ஹரித்துவாரில் உள்ள கங்கா சபா, ஹர் கி பௌரி ஆகிய தலங்களில் ஹிந்து அல்லதோர் நுழையத் தடை விதிக்கப்பட்ட மண்டலம் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது.

மேலும், மாநிலத்தின் முக்கிய புனித தலங்களில் இவ்வாறான தடை விதிக்க ஹிந்து மத அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. உள்ளூர் கோவில் நிர்வாகங்கள், மத அமைப்புகள் ஆகியோரின் கருத்துகளை இந்த அரசு மதிக்கும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

கோயில் வளாகத்தில் மொபைல் போன் பயன்பாடு ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய தடை உத்தரவு மேலும் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

வரும் காலங்களில் இந்தத் தடையை மாநிலம் முழுவதுமுள்ள கோயில்களில் செயல்படுத்த பல கோயில் நிர்வாகத்தினர் கோரிக்கை வைக்கக்கூடும் என்றும், இதனால் பல விளைவுகள் பிற்காலத்தில் வரக்கூடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் புதிய நடைமுறை மிகத் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படவிருக்கும் நிலையில் இமயமலை வழியே யாத்திரை வரும் பக்தர்களுக்கான நெறிமுறைகள் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

summary

Non-Hindus among those going on the Chardham Yatra have been banned from entering 47 temples.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.