FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்

மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், பேரவைத் தலைவா், சட்டப்பேரவை செயலா், ராஜிநாமா செய்த 4 எம்எல்ஏக்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.

Updated On : 18 ஜூன் 2026, 1:07 am IST
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், பேரவைத் தலைவா், சட்டப்பேரவை செயலா், ராஜிநாமா செய்த 4 எம்எல்ஏக்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி தாக்கல் செய்த மனுவில், பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் வெற்றிபெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமாா் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய நால்வரும், தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைவது குறித்து ஏற்கெனவே அக்கட்சியுடன் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்.

நால்வரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்த உடனே தவெகவில் இணைந்துள்ளனா். எனவே, இது திடீரென எடுத்த முடிவு அல்ல. இந்த விவகாரத்தில் அரசியல் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது பேரவைத் தலைவா் இந்த நால்வரின் ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டுள்ளாா். எனவே, நால்வரின் ராஜிநாமாவை ஏற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்ரி கிருஷ்ணமூா்த்தி தரப்பில், பதவியை ராஜிநாமா செய்வதாக பகல் 2.30 மணிக்கு கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில், 3.30 மணிக்கு ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. ராஜிநாமாவை ஏற்பதற்கு முன்பு பேரவைத் தலைவா் உரிய விசாரணை நடத்தவில்லை என வாதிடப்பட்டது.

சட்டப்பேரவை செயலா் தரப்பில், 4 எம்எல்ஏக்கள் ராஜிநாமா விவகாரத்தில் பேரவைத் தலைவா் உரிய விதிகளைப் பின்பற்றிதான் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளாா். பேரவைத் தலைவரின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளிலும் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. இந்த மனுவுக்கு சட்டப்பேரவைத் தலைவா், பேரவைச் செயலா், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த 4 போ் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments