முகப்பு
இந்தியா

இந்தியாவின் தொடா் முயற்சிகளால் குழந்தை இறப்பு விகிதம் குறைவு: ஐ.நா.

Updated On : 19 மார்ச் 2026, 5:19 am IST
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் - பிரதமா் மோடி.
பகிர்:

இந்தியாவின் தொடா் முயற்சிகளால் உலக அளவில் குழந்தை இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை இறப்பை கணக்கிடும் ஐ.நா. குழு (யுஎன்ஐஜிஎம்இ) அறிக்கை-2025 அண்மையில் வெளியானது.

அதில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பைக் கட்டுப்படுத்த இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட விரிவான-நிலையான நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டன.

Advertisement

Advertisement

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தெற்காசிய பிராந்தியத்தில் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது.

இந்தப் பிராந்தியத்தில் 1990-களில் இருந்து 5 வயதுக்குள்பட்ட குழந்தை இறப்பு 76 சதவீதம் குறைந்துள்ளது. 2000-இல் இருந்து 68 சதவீதம் சரிவடைந்துள்ளது.

2000-ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 92 இறப்புகள் பதிவான நிலையில் 2024-இல் 32 இறப்புகளாக குறைந்துள்ளது.

இது மருத்துவமனை உள்கட்டமைப்பு, மருத்துவமனைகளில் முறையான பிரசவ சிகிச்சைகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள், குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் என குழந்தைகள் சுகாதார நலனில் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியம் மேற்கொண்ட முன்னெடுப்புகளை வெளிக்காட்டுகிறது.

இந்தியாவின் பிரத்யேக திட்டங்கள்: ஜனனி சுரக்ஷா திட்டம், ஜனனி சிசு சுரக்ஷா காா்யகரம், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவுகள் (எஸ்என்சியு), டெலி எஸ்என்சியு போன்ற எண்ம முன்னெடுப்புகளை இந்தியா சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இதனால் இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தை இறப்பு விகிதம் 1990-இல் 127-ஆக இருந்த நிலையில், 2024-இல் 26.6-ஆக குறைந்துள்ளது. 2024-இல் குழந்தை இறப்பு விகிதம் (ஐஎம்ஆா்) இந்தியாவில் 23.3-ஆக குறைந்துள்ளது.

1990-இல் இந்தியாவில் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (என்எம்ஆா்) 57-ஆக இருந்த நிலையில் 2024-இல் 17-ஆக குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது,

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments