இந்தியாவின் வேலையின்மை அதிகரிப்பு: 11 மாதங்களில் இல்லாத அளவாக 5.5%-ஐ எட்டியது!
நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த 11 மாதங்களில் இல்லாத உச்சமாக 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற தகவல் குறித்து...
நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த 11 மாதங்களில் இல்லாத உச்சமாக 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்தால் பொருளாதார மந்தநிலை அல்லது தொழில்துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தின் ஆரம்பக்கட்ட எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின் படி,
Advertisement
Advertisement
நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த 11 மாதங்களில் இல்லாத வகையில் புதிய உச்சமாக மே மாதத்தில் 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஏப்ரல் மாதத்தில் 5.20 சதவீதமாக இருந்தது. அதேவேளையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 55.0 சதவீதமாக இருந்த 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மே மாதத்தில் குறைந்தபட்ச அளவான 54.4 சதவீதத்துக்கு குறைந்துள்ளது.
வேலை செய்பவர்கள் அல்லது தீவிரமாக வேலை தேடுபவர்களின் சதவீதத்தைக் குறிக்கும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் முறையே 56.6 சதவீதம் மற்றும் 49.8 சதவீதமாக குறைந்துள்ளது. ஆண்டு ஒப்பீட்டின்படி, மே மாதத்தில் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 0.4 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களும் முறையே 0.3 மற்றும் 0.6 சதவீதமாக குறைந்துள்ளன.
15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மே மாதத்தில் 32.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 36.7 சதவீதமாக உள்ளது; அதேவேளையில் நகர்ப்புறங்களில் இது முந்தைய மாதத்தின் 24.8 சதவீதம் என்ற அளவிலே உள்ளது. 2025 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 0.4 சதவீத புள்ளிகள் (33.2%-லிருந்து 32.8%-க்கு) குறைந்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஏறக்குறைய மாற்றமின்றி இருந்த நிலையில், நகர்ப்புறப் பெண்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஓராண்டில் 0.5 சதவீதம் குறைந்துள்ளது.
15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான தொழிலாளர் மக்கள் தொகை விகிதம், மே 2025 மற்றும் மே 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகள் இரண்டிலும் 0.3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.
ஏப்ரல் 2026-இல் 52.2 சதவீதமாகவும் இருந்த ஒட்டுமொத்த தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம், மே 2026-இல் 51.4 சதவீதமாக உள்ளது. மே 2025-இல் 51.7 சதவீதமாக இருந்தது.
கிராமப்புறங்களில் தொழிலாளர் மக்கள்தொகை விகிதமானது ஏப்ரல் 2026-ல் 54.9 சதவீதமாக இருந்த நிலையில், மே 2026-ல் 53.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் ஏப்ரல் மாதத்தில் 46.8 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 46.6 சதவீதமாக குறைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 4.60 சதவீதமாக இருந்த கிராமப்புற வேலையின்மை விகிதம், மே மாதத்தில் 5.10 சதவீதமாக அதிகரித்ததுள்ளது; அதேவேளையில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் இதே காலகட்டத்தில் 6.6 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் மே 2026-ல் 5.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் இருந்த 5.2 சதவீதத்தை விட அதிகமாகவும், கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலையாகவும் உள்ளது.
நகர்ப்புற வேலையின்மை விகிதம் மே 2025-உடன் ஒப்பிடுகையில் 6.90 சதவீதத்திலிருந்து 6.40 சதவீதமாகக் குறைந்து, மே 2026-இல் 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் நிலையாக இருந்த அதே வேளையில், கிராமப்புற வேலையின்மை விகிதமும் இதே காலகட்டத்தில் 5.1 சதவீதம் என்ற அதே அளவிலே நீடித்தது. வேலையின்மை விகிதத்தில் அதிகரிப்புடன் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், இந்த காலகட்டத்தில் தொழிலாளர் சந்தை நிலவரம் சற்று மந்தமடைந்திருப்பதைக் காட்டுகின்றன.
வேலைவாய்ப்புகள் அரிதாகி வருவது ஏன்?
பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளை பாஜக அரசு கொண்டாடினாலும், நாட்டில் குறைந்து வரும் வேலைவாய்ப்புகள், தேக்கமடைந்த வருமானம் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலம் ஆகியவற்றை இளைஞர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் வழங்காத பட்சத்தில், பொருளாதார வளர்ச்சியால் பெரியளவில் பயன் எதுவும் இருக்காது.
இந்த புள்ளிவிவரங்களுக்குப் பின்னால், உருவாகும் புதிய வேலைகளின் எண்ணிக்கையை விட வேலை தேடிப் போராடும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் குடும்பங்களும் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.