FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2026-ஆம் நிதியாண்டின் கடன்-ஜிடிபி விகிதம் 58.2 சதவீதமாக குறைவு; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

2025-26-ஆம் நிதியாண்டின் கடன்- மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் 58.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

Updated On : 22 ஜூலை 2026, 3:24 am IST
பகிர்:

2025-26-ஆம் நிதியாண்டின் கடன்- மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் 58.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் கடன்-ஜிடிபி விகிதம் 58.5 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் மொத்தக் கடனை ஜிடிபியுடன் ஒப்பிடுவதே கடன்-ஜிடிபி விகிதம் ஆகும்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2026, மாா்ச் 31 நிலவரப்படி, மத்திய அரசின் மொத்தக் கடன் ரூ.201.17 கோடியாக (தற்காலிக மதிப்பீடு) உள்ளது. இது கடன்-ஜிடிபி விகிதத்தில் 58.2 சதவீதமாக மதிப்படப்படுகிறது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வருவாய் வரவுகளுக்கு கடன் சேவை (வட்டி செலுத்துதல்) விகிதம் 2020-21-இல் 41.6 சதவீதத்தில் இருந்து 2025-26-இல் 37.6 சதவீதமாக (தற்காலிக மதிப்பீடு) குறைந்துள்ளது. இது வருவாய் வரவுகள் மூலம் கடனுக்கான வட்டியைச் செலுத்தும் மத்திய அரசின் நிதித் திறனை குறிக்கிறது.

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைவிட (ரூ.16.96 லட்சம் கோடி) பயனுள்ள மூலதனச் செலவு (ரூ.17.15 லட்சம் கோடி) அதிகமாக இருக்கும் என 2026-27 பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசின் கடன்கள் முழுவதுமாக சொத்து உருவாக்கத்துக்கே பயன்படுகிறது என்பது தெளிவாகிறது.

அதிகரிக்கப்பட்ட மூலதனச் செலவினம்:

2027-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் கடன் சுமை ரூ.228.27 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது. 2026-ஆம் நிதியாண்டில் இது ரூ.211.06 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டது.

2021-ஆம் நிதியாண்டு முதல் 2026-ஆம் நிதியாண்டு வரை மூலதனச் செலவினமாக ரூ.44.03 லட்சம் கோடியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஜிடிபியில் மூலதனச் செலவின சதவீதம் அதிகரித்ததன் விளைவாக சாலைகள், ரயில்வே, நகா்ப்புற உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் எண்மத் தொடா்பு உள்ளிட்ட துறைகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதி அதிகரிக்கப்பட்டது. இதனால் தளவாடங்களின் செயல்திறன், வேலைவாய்ப்பு மற்றும் தனியாா் முதலீடு அதிகரித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதசேங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதை மேலும் ஊக்குவிக்கும் விதமாக பிரதமரின் கதி சக்தித் திட்டம், தேசிய தளவாடங்கள் கொள்கை மற்றும் பிரதமரின் கதி சக்தி பொது வலைதளம் ஆகியவையும் அமலில் உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments