3வது குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும்! அரசுக்கு கோரிக்கை!
கருத்தடை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து..
மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்றும் கருத்தடை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு விசிக எம்.பி., ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் அபாயகரமான அளவில் சரிந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் வெளியாகியிருக்கும் 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே ( NFHS-6) அறிக்கையில் தமிழ்நாட்டைப் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்திய அளவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் 2.0 ஆக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
Advertisement
Advertisement
அது 1.7 என்ற அளவில் உள்ளது. இது இனிவருங்காலங்களில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும். இப்போதுள்ள மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்துகொண்டே போகும்.
ஒரு பெண்ணுக்குச் சுமார் 2.1 குழந்தைகள் என்ற மொத்தக் கருவுறுதல் விகிதமே (TFR) சமநிலைக்கு ஏற்றதாகும். கருவுறும் வயதை அடைவதற்கு முன்பே ஏற்படும் இறப்பு விகிதங்களையும் ஈடுகட்டியவாறு, ஒரு தாய் தனக்கும் தன் இணையருக்கும் 'ஈடுசெய்வதற்கு' இந்த விகிதம் வழிவகை செய்கிறது.
இந்தியாவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் ஏற்கனவே மக்கள் தொகை அதிகமாக உள்ள உத்தரப்பிரதேசத்தில் 2.2 ஆகவும் பீகாரில் 2.7 ஆகவும் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. இதனால் இப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் ஒன்றிய அரசின் நிதியை அந்த மாநிலங்களே அதிகமாகப் பெறும். அத்துடன் தொகுதி மறுசீரமைப்பில் அந்த மாநிலங்களுக்குத்தான் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும்.
தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகித்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு இயற்கையாக ஏற்பட்டதல்ல. பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வதால் இது ஏற்பட்டுள்ளது.
இந்திய அளவில் கருத்தடை செய்துகொள்வோரின் விகிதம் 36.5 ஆக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அது 56.6 ஆக உள்ளது.
தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதத்தின் (TFR) சரிவைத் தடுத்து நிறுத்த உடனடியாகத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவித்தல்; கருத்தடை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் எனத் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
Having a Third Child Should Be Encouraged A Plea to the Government
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.