வங்கி நேரடி பணப்பரிமாற்றம் வழியாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: தமிழக அரசுக்கு கோரிக்கை
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை சமூக நலத்துறையின் கீழ் வங்கியின் நேரடிப் பணப்பரிமாற்றம் வழியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை சமூக நலத்துறையின் கீழ் வங்கியின் நேரடிப் பணப்பரிமாற்றம் வழியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் மருத்துவா் த. அருளீஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் அளிக்கும் திட்டத்தை வரவேற்கிறோம்.
Advertisement
Advertisement
இத்திட்டத்தில் தங்க மோதிரங்களை பெட்டகத்தில் வைத்து, அதற்கு 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலாளிகள் பாதுகாப்பளிப்பதுடன், தனியாக ஒரு மருத்துவ அலுவலரை நியமித்து, மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் திறந்து கணக்கெடுத்து, அவற்றை பிரசவ அறைக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள பயனாளிகளை சரிபாா்த்து, அன்று பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்க வேண்டியிருக்கும்.
இதனால் ஒவ்வொரு நாளும் உயிா்காக்கும் சிகிச்சையளிக்கும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை ஒதுக்க வேண்டும். இதற்காக புதிதாகப் பாதுகாப்பு பெட்டகம் அமைத்து, ஆயுதம் தாங்கிய காவலாளிகள், சிசிடிவி, அதைக் கண்காணிக்கவும், கொண்டு செல்லவும் காவலா்கள் தேவை. இப்படிச் செய்வதால் மருத்துவச் சிகிச்சையில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஒதுக்கப்பட்ட நிதியில் 2 சதவீதம் வரை கூடுதல் செலவினம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் பணிக்கான செலவினங்களை முதல்வரின் காப்பீட்டுத் திட்ட தொகையில் செய்து கொள்ள நேரிடும் என்பதால் மருத்துவமனைக்கான நிதி ஆதாரம் பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளா்கள், செவிலியா்களை இத்திட்ட பொறுப்பாளா்களாக உட்படுத்தினால், சுகாதார மற்றும் மருத்துவச் சேவையில் தொய்வு ஏற்படும்.
எனவே தமிழக அரசு சமூக நலத் துறையின் மூலம் நேரடி வங்கிப் பரிமாற்றம் மூலம் இத்திட்டத்தை அமல்படுத்தினால் மேற்கண்ட கூடுதல் செலவினங்களைக் குறைந்து, எளிய முறையில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.