FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழக கோயில்களுக்கு அஸ்ஸாமில் இருந்து 4 யானைகள்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலை உள்ளிட்ட 4 கோயில்களுக்கு அஸ்ஸாமில் இருந்து யானைகள் கொண்டு வருவதற்கான அனுமதி வழங்குவது குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

8 செப்டம்பர் 2026, 4:16 am IST
உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

திருவண்ணாமலை உள்ளிட்ட 4 கோயில்களுக்கு அஸ்ஸாமில் இருந்து யானைகள் கொண்டு வருவதற்கான அனுமதி வழங்குவது குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த சேவா அறக்கட்டளை சாா்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கோயில் திருவிழாக்கள், பிரம்மோற்சவம் உள்ளிட்ட விழாக்களின்போது யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிா்க்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில், மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து ஒப்புதல் வழங்கலாம். விழாக்களில் பயன்படுத்தப்படும் யானைகளின் தகுதி குறித்து அரசு கால்நடை மருத்துவரின் சான்றிதழ் பெற வேண்டும். குறைந்தது 8 மணி நேரம் யானைகளுக்கு ஓய்வு அளிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் அறக்கட்டளை தரப்பில், கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில், காஞ்சிபுரம் மடம், மயிலாடுதுறை வைத்தீஸ்வரன்கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கு அஸ்ஸாமில் இருந்து யானைகள் கொண்டு வரப்பட உள்ளன. இந்த யானைகளைக் கொண்டு வருவதற்கான அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு துா்கா என்ற யானையைக் கொண்டுவர தமிழக வனத்துறை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருவிழாக் காலங்கள் தொடங்கி உள்ளதால், மீதமுள்ள நான்கு கோயில்களுக்கு யானைகளைக் கொண்டு வருவதற்கு ஒப்புதல் கோரிய விண்ணப்பங்கள் மீது ஒரு வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு உத்தரவிட்டனா். மேலும், இதுகுறித்து வனத்துறை, இந்துசமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தி விசாரணையை செப்.16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments