என்னுடன் காதல்; மோடியுடன் திருமணம்! தேவெ கெளடா பற்றி கார்கே பேச்சால் சிரிப்பலை!
மாநிலங்களவையில் தேவெ கெளடா பற்றி மல்லிகார்ஜுன கருத்தால் சிரிப்பலை...
மாநிலங்களவையில் முன்னாள் பிரதமரும் அவை உறுப்பினருமான தேவெ கெளடா பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பகிர்ந்த கருத்தால் சிரிப்பலை ஏற்பட்டது.
நாட்டில் 10 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. காலியாகவுள்ள இடங்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாநிலங்களவையில் பதவிக் காலம் நிறைவடைந்த உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை பாராட்டி உரையாற்றினர்.
அப்போது மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
“அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள், நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற பெரும் ஆர்வத்துடன் இருப்பதால் அவர்கள் சோர்வடைவதில்லை, ஓய்வும் பெறுவதில்லை.
தேவெ கெளடாவை 54 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தெரியும். அவருடன் இணைந்து நிறைய தருணங்களில் பணியாற்றி இருக்கிறேன்.
பின்னர் ஏனென்று தெரியவில்லை, என்னுடன் அன்பை பரிமாறிய அவர், மோடியை திருமணம் செய்துகொண்டார்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலங்களவை மூத்த தலைவர்கள் தேவெ கெளடா, சரத் பவார், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது.