கர்நாடகத்தில் கார்கே உள்பட 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியின்றித் தேர்வு!
கர்நாடகத்தில் மல்லிகார்ஜுன கார்கே உள்பட 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது பற்றி...
கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (ஜூன் 11) அறிவித்தது.
கர்நாடகத்தில் நான்கு மாநிலங்களவை இடங்கள் ஜூன் 25 ஆம் தேதியுடன் காலியாக உள்ளன. காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வரும் ஜுன் 18 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த 4 இடங்களில் 3 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்புள்ளது. ஆகவே, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, மன்சூர் அலி கான், பவன் கேரா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மேலும், பாஜக சார்பில் எம். நாகராஜா மனுதாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான திங்கள்கிழமைக்குள் (ஜூன் 8) ஐந்து வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒரு சுயேச்சை வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கக்கப்பட்டது.
இந்த நிலையில், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அளிக்கப்பட்ட கடைசி நாளான இன்று, நான்கு பேர் மட்டுமே களத்தில் இருந்ததால் இவர்கள் அனைவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே, மன்சூர் அலி கான், பவன் கேரா, எம். நாகராஜா ஆகியோர் வெற்றிபெற்ற வேட்பாளர்களாக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.