தொடர்ந்து 7வது ஆண்டாக.. ஜமா மசூதியில் தொழுகைக்குத் தடை!
ஜமா மசூதியில் தொடரும் தொழுகைத் தடை பற்றி..
காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜமா மசூதியில் ஈத் தொழுகை நடத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
நாடு முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகத்துடனும், கோலாகலத்துடன் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும், மசூதிகளுக்குச் சென்று தொழுகையை நடத்தியும் வருகின்றனர்.
தால் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஹஸ்ரத்பால் தர்காவில் இஸ்லாமியர்கள் பலர் ஒன்றுகூடி ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர். ஹஸ்ரத்பாலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றுகூடித் தொழுகையில் ஈடுபட்டனர். இது காஷ்மீரில் உள்ள மிகப்பெரிய மசூதியாகும்.
நகரின் நவ்ஹட்டா பகுதியில் உள்ள ஜமா மசூதியில் தொழுகைக்காக மக்கள் கூடுவதைத் தடுப்பதற்காக அப்பகுதி முழுவதும் பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, ஜமா மசூதியில் ரமலான் தொழுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு பெரும் வருத்தத்தைத் தரக்கூடியதாகவே மாறியுள்ளது.
காஷ்மீரின் தலைமை மதகுருவான மிர்வைஸ் உமர் ஃபாரூக் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மசூதியை பூட்டுபவர்களே ஈத் முபாரக் என்று வாழ்த்துத் தெரிவிப்பது கவலைக்குரியதாக உள்ளது.
முல்வர் உமர் அப்துல்லா மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா ஆகியோர் ஹஸ்ரத்பாலில் தொழுகை நடத்திய முக்கிய நபர்களில் அடங்குவர்.
ஈத் தொழுகைக்குப் பிறகு அமெரிக்க எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டங்கள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் அஞ்சுவதால், நகரின் பாதுகாப்பற்ற பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டன.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஈத் தொழுகையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். அனைத்து வயது பாலினத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, மசூதிகளுக்குச் சென்று தொழுகையை நடத்தினர்.
ரமலான் மாதத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து, பரிசுகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்ளும் நாளாக ரம்ஜான் அனுசரிக்கப்படுகிறது.