ஸ்ரீநகர் ஜமா மசூதியில் 8வது ஆண்டாக ஈத் தொழுகை ரத்து!
ஸ்ரீநகரில் உள்ள ஜமா மசூதியில் ஈத் பெருநாள் தொழுகை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக..
ஸ்ரீநகரில் உள்ள ஜமா மசூதியில் ஈத் பெருநாள் தொழுகை இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் பழைய நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஈத்கா மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமா மசூதி ஆகிய இடங்களில் ஈத் தொழுகை நடத்த எட்டாவது ஆண்டாகத் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாக அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்தனர்.
இதுதொடர்பாக மிர்வைஸ் உமர் ஃபாரூக் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
Advertisement
Advertisement
எட்டாவது ஆண்டாகத் தொடர்ந்து, காஷ்மீர் முஸ்லிம்களின் ஈத்கா மற்றும் ஜாமா மசூதியில் ஈத் தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
புனிதமும் கொண்டாட்டமும் நிறைந்த ஈத் பண்டிகை நாளில், காஷ்மீர் முஸ்லிம்களை வரவேற்பது தடுப்புகள், கட்டுப்பாடுகள், பூட்டப்பட்ட வாயில்கள் மற்றும் அச்சுறுத்தல்களே.
இது நிர்வாகம் அல்ல, எங்களின் மத அடையாளம், கண்ணியம், அடிப்படை உரிமைகள் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும். இது எங்களை ஆழமாகப் பாதிக்கிறது.
ஈத்காவில் நடைபெறும் ஆன்மிக எழுச்சியூட்டும் ஈத் தொழுகைகளைக் காணாமலேயே காஷ்மீர் குழந்தைகள் வளர்ந்து வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
நூற்றாண்டுகளாக எங்களின் கூட்டு வாழ்க்கையை வடிவமைத்து வந்துள்ள மரபுகளையும், நினைவுகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு முழுத் தலைமுறைக்கே மறுக்கப்பட்டு வருகிறது.
நம்பிக்கையைச் சிறைப்படுத்தவோ, வன்முறையின் மூலம் ஒடுக்கவோ முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒன்றை அறிந்துகொள்ளட்டும், ஈத்கா, ஜாமா மசூதி மற்றும் தங்களின் மத நிறுவனங்களுடன் காஷ்மீர் மக்கள் கொண்டுள்ள ஆழமான ஆன்மிகப் பிணைப்பை, இவ்வுலகில் உள்ள எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாது என உறுதியுடன் வலியுறுத்தினார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வாணி ஈத் தொழுகைக்கு மூன்று நாளைக்குப் பிறகு பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். அவரது கொலை பல மாதங்களாக பள்ளத்தாக்கில் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இதனால் அவர் கொல்லப்பட்டதிலிருந்து, சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டு ஈத்காவில் ஈத் தொழுகைகள் நடைபெறுவதில்லை.
ஈத் தொழுகைக்கு முன் ஈத்காவில் பாரம்பரியமாக ஈத் பிரசங்கத்தை வழங்கும் மிர்வைஸ், முகமது உமர் ஃபாரூக் ஆகியோர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்பின் 370வது பிரிவை 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அன்றுமுதல் மிர்வைஸ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.