ரேமண்ட் நிறுவன உரிமையாளர் சென்ற வேகப்படகு விபத்து! இந்தியர்கள் 2 பேர் பலி!
ரேமண்ட் நிறுவன உரிமையாளர் சென்ற வேகப்படகு மாலத்தீவில் விபத்துக்குள்ளானது பற்றி...
ரேமண்ட் குழுமத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கௌதம் சிங்கானியா சென்ற வேகப்படகு விபத்துக்குள்ளானது.
ரேமண்ட் ஆடை நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருப்பவர் கௌதம் சிங்கானியா (60). இவர் மாலத்தீவில் உள்ள ஃபெலிதூ தீவுக்கு சுற்றுலா சென்றார்.
அங்கு வேகப்படகில் பயணித்த இவர் நேற்று (மார்ச் 19) விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் வெளியாகின. வேகப்படகில் இவருடன் சேர்ந்து 5 இந்திய ஆண்கள் உள்பட 7 பேர் இருந்தனர்.
இந்த நிலையில், படகு வேகமாக சென்றபோது ஏற்பட்ட விபத்தில் படகில் இருந்த 5 பேர் கடலில் விழுந்தனர். விபத்துக்குள்ளான படகு அதிவேக பந்தயங்களுக்குப் பயன்படுத்தப்படும் படகாகும்.
இந்த விபத்தில் கௌதம் சிங்கானியா மீட்கப்பட்டார். அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது நலமாக உள்ளார்.
இவருடன் கடலில் விழுந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டனர், ஆனால், அதில் இந்தியர்கள் 2 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமல் போனவர்களின் உடல்களைத் தேடும் பணியில் மாலத்தீவு கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.