3 முறை குஜராத் முதல்வர்! 3 முறை பிரதமர்! மோடிக்கு அமித் ஷா புகழாரம்
குஜராத் முதல்வராக 3 முறை, நாட்டின் பிரதமராக 3 முறை என மிக நீண்ட காலம் பதவி வகித்து பிரதமர் நரேந்திர மோடி சாதனை...
குஜராத் முதல்வராக 3 முறை, நாட்டின் பிரதமராக 3 முறை என மிக நீண்ட காலம் பதவி வகித்து பிரதமர் நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமித் ஷா பதிவிட்டுள்ளதாவது,
''சேவை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பில் புதிய மைல்கல். இன்று, பிரதமர் நரேந்திர மோடி, சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் 8,930 நாள் பதவி வகித்த சாதனையை முறியடித்து, இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
முதலில் குஜராத் முதல்வராகவும் இப்போது பிரதமராகவும் பிரதமர் மோடி, 8,931 நாட்கள் பொது வாழ்க்கை, தேசத்திற்கே முதலிடம் தரும் ஆட்சிமுறை, செயலில் நேர்மை மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அயராத சேவையை வழங்குவதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கை மற்றும் இணையற்ற சேவையின் மீது கட்டப்பட்ட பாரம்பரியம் தற்போது ஆட்சியில் உள்ளது.
மோடியின் பத்தாண்டு கால சேவை, அவருக்கென ஒரு சகாப்தத்தையே வடிவமைத்துள்ளது. ஏழைகளுக்கு உரிமைகளை வழங்குவது, வளர்ச்சியில் புதிய மைல்கற்களை அமைப்பது அல்லது உலக அரங்குகளில் தேசத்தின் பெருமையை உயர்த்துவது என, மோடியின் பதவிக்காலம் இந்தியாவை அடையாளம் காண முடியாத அளவிற்கு உருமாற்றியுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
2001-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராகப் பதவியேற்ற பிரதமர் மோடி, தொடர்ந்து 2014, 2019, 2024 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பிரதமராகவும் பதவியேற்றார்.