கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவைத் தேர்தல் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறித்து...
வரவிருக்கும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவைத் தேர்தல் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது என கேரள மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கர் தெரிவித்தார்.
தமிழகம், கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. அதன்படி, கேரளத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இதனையொட்டி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்காக, திருவனந்தபுரத்தில் உள்ள பத்திரிகை தகவல் பணியகத்தால் தயாரிக்கப்பட்ட 'ஓட்டறிவு' என்ற தேர்தல் வழிகாட்டி நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய கேரள மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி ரத்தன் யு கேல்கர், “கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவைத் தேர்தல் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், 75.60 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.