ஹௌராவில் ராமநவமி ஊர்வலம் நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி!
ராமநவமி ஊர்வலத்திற்கு அனுமதி பற்றி...
ஹௌரா நகரில் மார்ச் 26 அன்று ராம நவமி ஊர்வலம் நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஹௌரா நகரில் லாப நோக்கற்ற அமைப்பு ஒன்று ராம நவமி ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி கோரியது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அமைப்பு சார்பில் மனுதாரர் அஞ்சனி புத்ர சேனா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மேற்கு வங்க தலைமை வழக்குரைஞர் கிஷோர் தத்தா, இந்த அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக ராமநவமி ஊர்வலங்களை நடத்தி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அஞ்சனி புத்ர சேனா சார்பில் நடத்தப்படும் ஊர்வலத்தைக் காலை நேரத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினார்.
முன்னதாக, மார்ச் 20 அன்று அதே இடத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ராமநவமி ஊர்வலத்தை மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே, விஷ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், மார்ச் 26 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஊர்வலம் நடத்த அந்த அமைப்பிற்கு நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அனுமதி அளித்தார்.
அதேசயமம், நிபந்தனைகளின்படி, ஊர்வலத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டக்கூடாது என்றும், ஊர்வலத்தின்போது எந்தவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது.
ஊர்வலத்தில், அலங்கார ஊர்தி மற்றும் ஸ்ரீராமரின் திருவுருவச் சிலையை ஏற்றிச் செல்ல ஒரேயொரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் கொடிகள், அடையாளங்களை பிவிசி பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.