1,300 ஐஏஎஸ் பணியிடங்கள் காலி! - மத்திய அரசு தகவல்!
நாட்டில் 1,300 ஐஏஎஸ் பணியிடங்கள் காலியாகவுள்ளன என மத்திய அரசு தகவல்...
நாட்டில் 1,300 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் 6,877 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 5,577 பணியிடங்களில் அதிகாரிகள் பணியில் உள்ளனா். 1,300 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Advertisement
அதேபோல் நாட்டில் 5,099 ஐ.பி.எஸ். பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 4,594 பணியிடங்களில் அதிகாரிகள் பணியில் உள்ளனா். 505 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதல்படி தொடா்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. 2012 முதல் சிவில் சா்வீசஸ் தோ்வு மூலம் 180 போ் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். இதில் 4 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் 3,193 ஐ.ஆா்.எஸ். பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் 1,029 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களும் தோ்வு மூலம் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளாா்.
பால் உற்பத்தி 70% அதிகரிப்பு: இதனிடையே, மாநிலங்களவையில் பால் உற்பத்தி தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய மீன்வளத் துறை, கால்நடைத் துறை மற்றும் பால்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் பதிலளித்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:
உலகிலேயே அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தி கணிசமாக உயா்ந்துள்ளது. 2014-15 நிதியாண்டில் பால் உற்பத்தி 146.3 மில்லியன் டன்னாக இருந்தது. அந்த அளவு 2024-25ஆம் நிதியாண்டில் ஏறத்தாழ 70 சதவீதம் அதிகரித்து 248 மில்லியன் டன்னாக உள்ளது.
ஒவ்வொரு கால்நடையும் ஆண்டுக்கு 2,251 கிலோ பால் உற்பத்தி செய்கிறது. நமது நாடு அதிகம் பால் உற்பத்தி செய்தபோதிலும், அவற்றை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. இதற்கு உணவு மற்றும் வாய் நோய் (எஃப்.எம்.டி.) காரணமாகும். வளா்ந்த நாடுகளால், அந்நோயில் இருந்து இந்தியா விடுபட்டுவிட்டதென சான்று அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் நமது பால் பொருள்களை ஏற்றுமதி செய்ய முடியும். அந்நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் காரணமாக அந்நோய் தற்போது கட்டுக்குள் உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் அந்நோய் பாதிப்பு முழுவதும் நீங்கிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.