நாட்டில் 1,300 ஐஏஎஸ் பணியிடங்கள் காலியாகவுள்ளன! - மத்திய அரசு தகவல்!
நாட்டில் 1,300 ஐஏஎஸ் பணியிடங்கள் காலியாகவுள்ளன என மத்திய அரசு தகவல்...
நாடு முழுவதும் 1,300 ஐஏஎஸ் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக, மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 1,300 ஐஏஎஸ் மற்றும் 550 ஐபிஎஸ் (காவலர்) பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவுள்ளதாக, மக்களவையில் மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமான பதிலில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, புதன்கிழமை (மார்ச் 25) அவர் வெளியிட்ட பதிலில், நாட்டில் மொத்தமுள்ள 6,877 ஐஏஎஸ் பணியிடங்களுக்கு 5,577 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதும், 5,099 ஐபிஎஸ் பணியிடங்களுக்கு 4,594 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் இடஒதுக்கீடு வழிக்காட்டுதல்களின்படி ஐஏஎஸ் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மேலும், 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் குடிமைப் பணித் தேர்வுகளின் மூலம் ஐஏஎஸ் பணிக்கு மொத்தம் 180 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர் எனவும், 4 சதவீத இடங்கள் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்துடன், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஓபிசி வகுப்பைச் சேர்ந்த 245 பேரும், எஸ்சி வகுப்பைச் சார்ந்த 135 பேரும், எஸ்டி வகுப்பைச் சார்ந்த 67 பேரும் ஐஏஎஸ் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், 5 ஆண்டு காலத்தில் ஓபிசி பிரிவிலிருந்து 255 பேரும், எஸ்சி பிரிவிலிருந்து 141 பேரும், எஸ்டி பிரிவிலிருந்து 71 பேரும் ஐபிஎஸ்-க்கு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.