முகப்பு
இந்தியா

காங்கிரஸில் இருந்து விலகியது ஏன்? பிரத்யுத் பர்டோலோய் விளக்கம்!

பிரத்யுத் பர்டோலோய் அளித்த விளக்கம் பற்றி..

Updated On : 28 மார்ச், 2026 at 7:33 AM
பிரத்யுத் பர்டோலோய் - DPS
பகிர்:

அஸ்ஸாமிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்யுத் பர்டோலோய் காங்கிரஸில் இருந்து விலகியது ஏன் என்று விளக்கமளித்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் காங்கிரஸ் உறுப்பினராகவும், அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவராகவும் இருந்த பர்டோலோய், தற்போது திஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இதுதொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் முதல் தனக்கு ஏற்பட்ட தொடர் மன வருத்தங்கள் படிப்படியாக அதிகரித்துவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்குள் தான் அவமதிக்கப்பட்டதாகவும், விரும்பத்தகாத நபராக உணர வைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட சசி தரூரின் வேட்புமனுவை ஆதரித்த பிறகு தான் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சசி தரூர் போன்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் உட்கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆரம்பத்தில், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபோது, ​​சசி தரூர் அதில் போட்டியிட விரும்பினார். அவரது வேட்புமனுவை முன்மொழிந்த நானே, அவருக்காகத் தீவிரமாகப் பிரசாரமும் மேற்கொண்டேன்.

அந்தத் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவரானார். அதன் பிறகு எனக்கு எதிராகத் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நான் உணர்ந்தேன். இருப்பினும், கார்கே எப்போதும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். என்னை ஏற்றுக்கொண்டார்.

சோனியா காந்தி எப்போதும் எனக்கு தாய் ஸ்தானத்தில் இருந்தவர். ஒருபோதும் என்னைப் பாகுபாட்டுடன் நடத்தியதில்லை. காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களே தன்னைத் திட்டமிட்டு ஓரங்கட்டியதாகவும், அந்தச் செயல் மிகவும் வெளிப்படையாகத் தெரிந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்க நான் விரும்பியபோது (விவாதங்களில் பங்கேற்போரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சிக்குள்ளேயே உள்ளது), எனக்கு ஒருபோதும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒருவேளை எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும், எனது பெயர் பேச்சாளர் பட்டியலில் மிகக் கடைசியில்தான் இடம்பெறும். இதனால், பேசுவதற்கு எனக்குப் போதிய நேரம் கிடைக்காது, அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.

இவை ஏதோ தற்செயலாக நடந்த தனித்த சம்பவங்கள் அல்ல என்றும், திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் என்றும் அவர் வலியுறுத்தினார். நான் பயனற்றவனாக உணர்ந்தேன்.

குறிப்பாக அஸ்ஸாம் அல்லது வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள எனது தொகுதிக்காகக் குரல் கொடுப்பதில், அர்த்தமுள்ள வகையில் என்னால் பங்கேற்க முடியாவிட்டால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதில் என்ன பயன்? இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருப்பதாக போர்டோலாய் வலியுறுத்தினார்,.

2025-ல் மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலின்போது மர்ம நபர்கள் சிலர் என்னைத் தாக்கினர். முகமூடி அணிந்த சமூக விரோதிகள் எனது காரை அடித்து நொறுக்கி, இரும்புக் கம்பிகள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டு என்னைக் கொல்ல முயன்றனர்.

நான் சிறு காயங்களுடன் தப்பித்து, இது பாஜகவின் கைவரிசை என்று நினைத்து அதை அலட்சியப்படுத்தினேன், ஆனால் காவல்துறை தாமாகவே முன்வந்து இந்த வழக்கை எடுத்துக்கொண்டது.

பின்னர், எனது நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் பதவியில் இருக்கும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வால் இந்தத் தாக்குதல் முழுவதும் திட்டமிடப்பட்டது தெரிய வந்ததில் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் அவரது நெருங்கிய நம்பிக்கைக்குரியவரும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியுமான ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பதற்காக.

இனிமேலும் இதைச் சகித்துக்கொள்ள முடியாது, போதும் என்ற நிலையை நான் அடைந்துவிட்டேன். இத்தகைய சூழலில் என்னால் தொடர்ந்து நீடிக்க இயலாது என்பதை உணர்ந்தேன்.

பாஜகவில் இணைந்தது குறித்துப் பேசிய போர்டோலோய்,

தான் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் மக்களவையிலிருந்தும் விலகியபோது, ​பாஜகவின் உயர்நிலைத் தலைவர்கள் தன்னைத் தொடர்புகொண்டனர். தனது முன்னாள் காங்கிரஸ் தோழரும், தற்போதைய அஸ்ஸாம் முதலமைச்சருமான ஹிமந்த பிஸ்வ சர்மா தன்னை அணுகியபோது, ​எனது ஒரே கோரிக்கை என்னவென்றால், எனக்கு உரியக் கண்ணியமும் சுயமரியாதையும் அளிக்கப்பட வேண்டும் என்பது தான்.

அந்த விஷயத்தில் என்னால் எவ்வித சமரசமும் செய்துகொள்ள இயலாது. நான் பதவி விலகியபோது, ​​மீண்டும் அஸ்ஸாமிற்கே திரும்ப வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், திஸ்பூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்த முன்மொழிவு பாஜக தலைமையிடமிருந்து வந்தது. இவை அனைத்தும் மிக விரைவாகவே நிகழ்ந்துவிட்டன. பின்னர், ஏன் போட்டியிடக்கூடாது? எனக்குத் தோன்றியது.

திஸ்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்குத் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு, பாஜகவின் ஒரு பிரிவினரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதாக வெளியான செய்திகள் குறித்துக் கேட்கப்பட்டபோது,

கட்சியின் தலைமை எனது வேட்புமனுவை அறிவித்தபோது, ​​இயல்பாகவே சில சலசலப்புகள் எழத்தான் செய்யும் இவ்வாறு ​போர்டோலோய் பதிலளித்தார்.

summary

Pradyut Bordoloi, a two-term MP from Assam who recently crossed over to the BJP, has claimed that he felt neglected, isolated and a "persona non grata" in the Congress.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.