ஆந்திரம்: நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்!
ஆந்திர மாநிலத்தில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது குறித்து...
ஆந்திர மாநிலத்தில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில அரசு இன்று (மார்ச் 31) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“இந்த நடைமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இதன்படி, கைத்தறிகளுக்கு 200 அலகுகளும் (யூனிட்), விசைத்தறிகளுக்கு 500 அலகுகளும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ. 150 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணச் சுமையைக் குறைப்பதையும், நெசவுத் தொழிலை ஊக்குவிப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் சுமார் ஒரு லட்சம் கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கும் 11,488 விசைத்தறி இயந்திரங்களுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதிவாய்ந்த கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ. 8,640 சேமிக்க முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது; அதேவேளையில், விசைத்தறி இயக்குபவர்கள் ஆண்டுதோறும் ரூ. 21,600 வரை சேமிக்க இயலும்.
நெசவாளர்களுக்கான ஓய்வூதியத்தை மாதம் ரூ. 4,000 ஆக உயர்த்துதல், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குச் சேமிப்பு நிதியாக ரூ. 5 கோடி ஒதுக்குதல் மற்றும் நவீன இயந்திரங்களை வாங்குவதற்கு 90 சதவிகிதம் வரை மானியம் வழங்குதல் ஆகியவையும் இந்தத் திட்டத்தில் அடங்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.