பெண்களுக்கு இலவச பேருந்து, மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000! கேரளத்தில் ராகுல் வாக்குறுதி!
கேரளத்தில் ராகுல் அளித்த வாக்குறுதி பற்றி...
கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்ட நிலையில், ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் நாளாக இன்று பிரசாரம் செய்து வருகிறார்.
கோழிக்கோட்டில் இன்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி,
“கேரள பெண்களையும் அவர்களின் எதிர்காலத்தை நாங்கள் பாதுகாக்கப் போகிறோம். ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் இலவச பேருந்தில் பயணத் திட்டம் கொண்டு வரப்படும். கல்லூரி செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் தலா ரூ. 1,000 வழங்கப்படும்.
முதியோர் ஓய்வூதியம் ரு. 3,000 வழங்கப்படும், அதற்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க வட்டியில்லாமல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். உம்மன் சாண்டி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சம் காப்பீடு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே பெண்கள் இலவச பேருந்து பயணத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டங்கள் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.