ஜம்மு - காஷ்மீரில் கனமழை! பள்ளி விடுதியில் சிக்கிய 34 பேரை மீட்ட ராணுவம்!
ஜம்மு - காஷ்மீரில் கனமழை காரணமாக பள்ளி விடுதியில் சிக்கிய 34 பேரை ராணுவம் மீட்டது குறித்து...
ஜம்மு - காஷ்மீரில் கனமழை காரணமாக பள்ளி விடுதியில் சிக்கிய 34 பேரை இன்று ராணுவம் பாதுகாப்பாக மீட்டது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் கனமழை பெய்தது. அங்குள்ள வாட்டர்காம் பகுதியில், தொடர் கனமழை காரணமாக நீர் வழித்தடங்களில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளூர் பள்ளி விடுதி ஒன்றை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் 30 பள்ளி மாணவர்களும் 4 ஆசிரியர்களும் வளாகத்திற்குள் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து, உள்ளூர் மக்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த ராணுவப் பிரிவின் உதவியை நாடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவம், அங்கு சிக்கித் தவித்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பத்திரமாக மீட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர். மீட்புப் பணிகளுக்குப் பிறகு, மீட்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் சிற்றுண்டி உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளையும் ராணுவம் வழங்கியது.
இப்பணியில் ராணுவத்துக்கு காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் ஆகியோர் உதவினர் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.கடந்த 48 மணி நேரத்தில் பாரமுல்லா உள்பட ஜம்மு - காஷ்மீரில் பரவலாக மிதமான மழையும், சில உயரமான பகுதிகளில் பனிப்பொழிவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.