அழகான (அமைதியான) காஷ்மீர்!
கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர், காஷ்மீர் அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த மே மாதத்தில் பயங்கரவாதம் காரணமாக ஓர் உயிரிழப்புகூட இல்லை என்ற தகவல் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
பொதுவாக, குளிர்காலத்தில் மிகக் கடுமையான குளிர் காரணமாக போக்குவரத்து எளிதாக இருக்காது என்பதால் பயங்கரவாத சம்பவங்கள் குறைவாக இருக்கும். மே மாதத்தில் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்பது கடந்த கால அனுபவமாகும். எனினும், பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இப்போது பயங்கரவாதத்துக்கு நபர் சேர்ப்பதும் தாக்குதல்களும் குறைந்துள்ளன.தெற்காசிய பயங்கரவாத இணையதளம் (சௌத் ஏசியா டெரரிஸம் போர்ட்டல்) வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2000-ஆம் ஆண்டு, 2002 மே மாதங்களில் 288 பேர், 2001-இல் 300 பேர், 2003-இல் 241 பேர் உயிரிழப்பு என இருந்தது படிப்படியாக குறைந்துவந்துள்ளது. கடந்த 2023, 2025 மே மாதங்களில் 14 பேர், 2024-இல் 7 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் எவரும் பயங்கரவாதத்தால் உயிரிழக்கவில்லை.
மேலும் ஒரு நம்பிக்கை அளிக்கும் அம்சமாக, 1990-களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் காரணமாக காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் சமூகத்தினர் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஸ்ரீநகரில் கடந்த ஜூன் 6 முதல் 14 வரை நடைபெற்றன. இதில் ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லாவின் ஆலோசகர் நாசிர் அஸ்லம் வானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
பண்டிட்டுகள் திரும்பி வந்து குடியேறும் வரை காஷ்மீர் முழுமை பெறாது என்று நாசிர் அஸ்லம் வானி குறிப்பிட்டது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி உள்ளது.
100-க்கும் மேற்பட்ட பண்டிட்டுகள் தங்களது பாரம்பரியச் சின்னங்களான அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள மார்த்தண்ட சூரிய கோயில், ஸ்ரீநகர் அருகே உள்ள கீர் பவானி கோயில் உள்ளிட்ட கோயில்களையும் தாங்கள் சிறிய வயதில் வசித்த பகுதிகளையும் பார்வையிட்டனர். அமெரிக்கா, மும்பை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 பண்டிட் சமூக அமைப்புகள் இதற்கு ஏற்பாடு செய்திருந்தன.
"ஜம்மு காஷ்மீரில் கமாண்டோ பள்ளி பயிற்சியாளர் உள்பட பல பதவிகளில் பல இடங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஷோபியானில் தினம் தினம் தாக்குதல்கள் நடைபெறும். இந்த இடத்துக்கு ஆயுதங்கள் இல்லாமல் ஒரு நாள் வருவோம் என்று கற்பனைகூட செய்து பார்த்ததில்லை. இப்போது ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்.
எப்போதும் பதற்றமாக இருந்த ஷோபியான் இன்று அமைதியுடன் என்னை வரவேற்றது என ஓய்வுபெற்ற பிரிகேடியர் தீப் பகத் அண்மையில் வெளியிட்ட விடியோவில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர், காஷ்மீர் அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டு, பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் வளர்ச்சிப் பணிகளுக்கும் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஜம்முவில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (ஐஐஎம்), ரஜெüரி, பாராமுல்லா, அனந்தநாக் ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் கடந்த 10 ஆண்டுகளில் நிறுவப்பட்டன.
ரூ.15,760 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் செனாப் என்ற இடத்தில் 1,178 அடி உயரத்தில் 0.53 கி.மீ. தொலைவுக்கு உலகின் மிக உயரமான இடத்தில் பாலம் கட்டப்பட்டது. ரூ. 37 ஆயிரம் கோடி மதிப்பில் உதம்பூரில் இருந்து ஸ்ரீநகர் வழியாக பாராமுல்லாவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. ஜம்மு தாவி - ஸ்ரீநகர் இடையே இரண்டு ஜோடி வந்தே பாரத் ரயில்கள் கடந்த ஏப். 30-ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றன.
இவற்றை எல்லாம் விஞ்சும் வகையில், ஜோஜிலா சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தின் பால்டால் பகுதியையும் லடாக்கின் திராஸ் மாவட்டத்தில் உள்ள மீனாமார்க் பகுதியையும் இணைக்கும் வகையில் 11,578 அடி உயரத்தில் 13.14 கி.மீ. தொலைவுக்கு ரூ.6,800 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
உலகிலேயே அதிக உயரத்தில் அதிக தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதை என்ற சிறப்பை பெற்றுள்ள இதற்கான பணிகள் கடந்த 2020 அக்டோபரில் தொடங்கின.
இதன் மூலம் குளிர்காலத்தில் 4-5 மாதங்கள் லடாக்கும், காஷ்மீர் பள்ளத்தாக்கும் துண்டிக்கப்படாது என்பதால் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், தேசத்தின் பாதுகாப்புக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாக இது அமையும்.
இந்தியாவின் இதர பகுதிகளைப்போன்று காஷ்மீரில் நீடித்த, நிரந்தர அமைதி நிலவும் அந்த நாளை ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்ல, காஷ்மீர மக்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். கடந்த பல ஆண்டு பயங்கரவாதத்துக்குப் பிறகு இப்போதுதான் அந்த மாநிலம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது என்பதை உள்ளூர் மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதைத்தான் குறைந்திருக்கும் பயங்கரவாதச் செயல்கள் தெரிவிக்கின்றன.
எண்ணியாா் எண்ணம் இழப்பா் இடன்அறிந்து
துன்னியாா் துன்னிச் செயின்.
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலை நெருங்கிச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவா் தம் எண்ணத்தை இழந்து விடுவாா்.
திருக்குறள் (எண் 494) அதிகாரம்: இடன் அறிதல்