இ85, இ100 என்றால்? பெட்ரோலில் 85% எத்தனால்! கருத்து கேட்கும் மத்திய அரசு!!
நாட்டில் விற்பனையாகும் பெட்ரோலில் 85 சதவிகிதம் எத்தனால் கலப்பு குறித்து மத்திய அரசு கருத்துக் கேட்கிறது.
நாட்டில் விற்பனையாகும் பெட்ரோலில் அதிகப்படியான அதாவது 85 சதவிகிதம் வரை எத்தனால் கலப்பதற்கான புதிய வரைவை வெளியிட்ட மத்திய அரசு, அதன் மீது மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்று கோரிக்கை வைத்துள்ளது.
அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலில் 85 சதவிகிதம் எத்தனால் கலந்து (பெட்ரோல் + எத்தனால்) விற்பனை செய்யப்பட்டால் அது இ85 என்றும், பெட்ரோல் அல்லாமல் வெறும் எத்தனால் மட்டும் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களுக்கு வழங்கப்படுவது இ100 (தூய்மையான எத்தனால்) என்றும், இதனை அதிகாரப்பூர்வமாக்கும் திட்டத்துக்கு புதிய வரைவு வெளியிடப்பட்டு, அதன் மீது மக்களின் கருத்துகள் கோரப்படுகிறது.
எத்தனால் கலப்பு மற்றும் மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்கான வாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில், வாகன புகை உமிழ்வு விதிமுறைகளில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திருத்தங்களைப் பரிந்துரைத்து அதன் மீது 30 நாள்களுக்குள் மக்கள் கருத்துத் தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
அதாவது மத்திய அரசின் திருத்தங்கள் குறித்த பரிந்துரை மீது தனிநபா்கள், அமைப்பினா் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கருத்துத் தெரிவிக்க 30 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய மோட்டாா் வாகன விதிமுறைகள் 1989-இல் செய்யப்பட்டுள்ள வரைவு திருத்தங்கள், பெட்ரோலுடன் 85 சதவீதம் எத்தனால் கலந்த இ85 எரிபொருள், வாகனங்களை ஏறக்குறைய முழுமையாக எத்தனால் மட்டுமே கொண்டு இயக்கும் இ100 எரிபொருள், 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிபொருளான பி100 உயிரி டீசல், ஹைட்ரஜன்-சிஎன்ஜி இயற்கை வாயு கலவைகள் ஆகியவற்றின் பயன்பாட்டை பரவலாக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு நடவடிக்கைளை துரிதப்படுத்தி வருகிறது.
தூய்மையாக எரியும் எரிபொருள், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, காா்பன் உமிழ்வை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஏற்கெனவே பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருள்தான் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது விரைவில் 85 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
எனினும், எத்தனால் அதிகரிப்பு காரணமாக வாகனங்களின் பயன்பாட்டுக் காலம் குறையலாம், பழைய வாகனங்கள் விரைவில் வீணாகும், எரிபொருள் பயன்பாடு அதிகரிப்பு போன்றவை ஏற்படும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.