தோல்விகளுக்கு மேற்காசிய மோதலைக் காரணம் காட்டும் மத்திய அரசு: பஞ்சாப் முதல்வர்!
சங்ரூர் மாவட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பேசியது பற்றி...
நாட்டில் நிகழும் அனைத்து தோல்விகளுக்கும் இனி மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை மத்திய அரசு காரணம் காட்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடுமையாக விமர்சித்தார்.
சங்ரூர் மாவட்டத்தின் சதோஜ் கிராமத்தில் நிலத்தடி மின் கம்பிகள் அமைக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்த பிறகு, செய்தியாளர்களிடம் முதல்வர் மான் பேசினார். எரிபொருள் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,
பொருளாதாரத்தின் உண்மை நிலையை மக்களிடமிருந்து மறைக்கும் மத்திய அரசு அறிவிக்கப்படாத ஊரடங்கு நிலைக்குத் தள்ளிக்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். மத்திய அரசு விலைவாசியைப் பல மடங்கு உயர்த்துவார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் போரைக் காரணம் காட்டுவார்கள்.
Advertisement
Advertisement
நாட்டில் உள்ள எரிபொருள், சமையல் எரிவாயு கையிருப்பு விவரங்களை மத்திய அரசு நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
முன்னதாக எரிபொருள் விலையில் எந்த உயர்வும் இருக்காது என மத்திய அமைச்சர்கள் பலர் கூறியிருந்தனர். தற்போது சட்டப்பேரவைத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், நாட்டைப் பாதுகாப்பது பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசின் தோல்வியடைந்த பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளே விலையுயர்வுக்குக் காரணம். மெல்ல அவர்கள் எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
நாடு ஊரடங்கு நிலைக்குக் கொண்டுசெல்லப்பட உள்ளது என்பதை நீங்கள் வெளிப்படையாகக் கூற வேண்டும். இது மத்திய அரசின் முழுமையான தோல்வியாகும்.
போர் நடப்பது ஈரானில். அமெரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் சண்டையிட்டு வருகின்றன.
ஆனால் ஏன் நம் நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன? நேபாளம், இலங்கை மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளில் ஏன் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை? இந்தியாவில் மட்டும் ஏன்? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.