உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது
லக்னௌ விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னௌ விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புச் சோதனையின்போது, 22 வயது பயணியின் பையிலிருந்து நாட்டுத் துப்பாக்கி கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தடுத்து வைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் சௌஹான் என்ற அந்தப் பயணி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபை செல்லவிருந்தபோது, அவரது பையில் இந்த ஆயுதம் கண்டறியப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Advertisement
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், வழக்கமான பாதுகாப்புச் சோதனையில் இந்த ஆயுதம் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் சரோஜினி நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விமான நிலைய அதிகாரி அளித்த புகாரின் பேரில், ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
” விமான நிலையத்தில் பயணியின் உடைமைகளை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து நாட்டுத் தயாரிப்பு 12-போர் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது,” என உதவி காவல் ஆணையர் ரஜ்னீஷ் வர்மா தெரிவித்தார்.