சர்வதேச விமான நிலையத்தில் தெரு நாய் தொல்லை: பயணிகள் புகார்!
தெரு நாய் தொல்லை தொடர்ந்து நீடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் : ஹைதராபாத் மாநகரின் சர்வதேச விமான நிலையத்தில் தெரு நாய் தொல்லை தொடர்ந்து நீடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலைய வளாகத்தில், உணவகம் ஒன்றில் தெரு நாய் புகுந்து அங்கு பயணிகள் மிச்சம் வைத்திருந்த உணவை சாப்பிட்டதைப் பார்த்த பயணி ஒருவர் அதைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும், சர்வதேச விமான நிலையத்தின் தரம் குறித்தும் சம்பந்தப்பட்ட விமான நிலைய நிர்வாகத்தைச் சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில், விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ‘வனஉயிர் மேலாண்மை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதன் ஒருபகுதியாக, தெரு நாய் கட்டுப்பாட்டுக்கான ஹைதராபாத் பெருநகர முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜிஎச்எம்சி) நிர்வாகத்துடன் நாங்கள் நெருங்கிப் பணியாற்றி வருகிறோம்.
Advertisement
Advertisement
அவர்களது குழுக்கள், விமான நிலைய வளாகத்தில் முறையாக ஆய்வு செய்தும் வருகிறார்கள். அந்த வகையில், 2026, ஜனவரி முதல் இதுவரை விமான நிலையத்தில் தெரு நாய்கள் சுற்றித் திரிந்தது குறித்து 21 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.
மேலும், குப்பை மேலாண்மை நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருவதுடன் அவை அங்குள்ள அனைத்து சேவை வழங்குதாரர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கட்டாயம் குப்பைகளை மூடப்பட்ட தொட்டிகளில் போட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், நிலைய பணியாளர்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.