விஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
விஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் தவெக ஆட்சியில் நிறுத்தப்படுமா?
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராடிய மக்களுக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு அளித்துப் போராட்டத்தையும் நடத்திய நிலையில், தவெக ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டம் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மாநகரின் இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கும் திட்டத்துக்கு விஜய் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்ததார். ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். இப்போது, தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வரப்போகிறது. எனவே விஜய் அந்த திட்டத்தை நிறுத்திவிடுவாரா? கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் விவசாயிகளிடமே மீண்டும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பரந்தூர் மக்களிடையே எழுந்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலயைத்தின் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் வருகை அதிகரிப்பதற்கு ஏற்ப, அவற்றை கையாள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு முன்னெடுத்தது.
Advertisement
Advertisement
ஆனால் விமான நிலையத்துக்கு 5,320 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையக்கப்படுத்தப்படுவதற்கு பரந்தூர் மற்றும் அதனை சுற்றியிருந்த மக்கள் கடுமையான போராட்டத்தை நடத்தி வந்தனர். இதுவரை 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
விமான நிலையம் அமைப்பது என்ற முடிவு மத்திய அமைச்சகத்தின் முடிவு என மாநில அரசு கைவிரித்தது. நிலத்தை மாநில அரசே தேர்வு செய்து கொடுத்ததாக மத்திய அரசு கைவிரித்தது. கிராமத்தின் சில பகுதிகளில் விமான நிலைய எல்லைகளை சுட்டிக்காட்டும் கோடுகள் வரையப்பட்டிருந்தன. மேலும், இப்பகுதிகளில் இருந்த நிலத்தின் உரிமையாளர்கள் சிலர் வெளியூரைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்களிடமிருந்து எளிதாக நிலம் கையகப்படுத்தப்பட்டது. பசுமை நிலத்தை அழித்துவிட்டு பசுமை விமான நிலையம் அமைப்பதா என்று கிராம மக்கள் தொடர்ச்சியாக போராடி வந்தனர்.
பரந்தூர் மட்டுமல்லாத வளத்தூர், மடப்புரம் என 20 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பதால் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வந்தனர். நீர் நிலைகள் அதிகம் உள்ள பகுதி என்பதால், இங்கு பல சவால்கள் ஏற்படும் என்றும் கிராமத்தினர் கூறி வந்தனர். பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த போராட்டத்துக்கு தவெக தலைவர் விஜய்யும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
விஜய் தன்னுடைய கள அரசியலையே பரந்தூரில் இருந்துதான் தொடங்கினார். அதாவது நேரடியாக பரந்தூர் சென்று அப்பகுதி மக்களுக்கு தன்னுடைய ஆதரவையும் தெரிவித்திருந்தார். பரந்தூரில் பேசிய விஜய், உங்களுடன் நான் நிற்பேன், தொடர்ந்து நிற்பேன், இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காவும் சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேன் என்று மக்கள் முன்னிலையில் விஜய் உறுதியளித்திருந்தார்.
விமான நிலையம் வரக்கூடாது என்று சொல்லவில்லை. மக்கள் அதிகம் வாழும் இந்த இடத்தில்தான் வரக்கூடாது என்று சொல்கிறேன், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், பரந்தூரில் விமான நிலையம் வர வேண்டும் என்று எந்த அரசு நினைத்தாலும் அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்க முடியும் என்றும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா என்றும் திமுக ஆட்சியை விஜய் கடுமையாக விமர்சித்திருந்தார்.
எனவே, இன்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று விரைவில் ஆட்சியமைக்கவிருக்கிறது. அவர் ஆட்சியமைத்தால், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா? அந்த திட்டம் நிறுத்தப்படுமா? என்று பரந்தூர் மற்றும் அதனை சுற்றியிருக்கும் கிராம மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
Will the Paranthur airport project, which Vijay fought against, be stopped under the TVK regime?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.